தினகரன் 28.09.2010
கடந்த 4 ஆண்டுகளில் திருவண்ணாமலை நகராட்சியில் ரூ104 கோடியில் திட்டப்பணிகள்
தி.மலை, செப். 28: தி.மலை நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ104 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை நகராட்சி 4வது வார்டில் தமிழக அரசின் இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்.பி.,வேணுகோபால், எம்.எல்.ஏ.,கு.பிச்சாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சித் தலைவர் இரா.திருமகன் வரவேற்றார்.
நல திட்ட உதவிகளை வழங்கி, உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தற்போதையை திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும், தனி நபரும் நேரடியாக பயன்பெறும் வகையில் திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ104 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும் நகராட்சிகளில் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீட்டுக்கு சிறப்பு அனுமதியை துணை முதல்வர் வழங்கியுள்ளார். அதன்படி, திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ5 கோடி நிதி பெறப்பட்டு சாலைகள் அமைக்கப்படுகிறது. பொது விநியோக திட்டத்துக்கு தமிழக அரசு ரூ3,750 கோடியை மான்யமாக ஒதுக்குகிறது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் பொது விநியோக திட்டத்துக்கு ரூ1,200 கோடி மட்டுமே மான்யமாக வழங்கப்பட்டது. தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்க வேண்டும் என்பதற்காக, கூடுதல் காஸ் இணைப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பெற்று வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நகராட்சித் துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன், தாசில்தார் மதிவாணன், வட்ட வழங்கல் அலுவலர் ஏ.ஜி.மூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன், ஷாஜகான், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.