தினமணி 28.09.2010
திருவண்ணாமலை நகராட்சியில் ரூ104 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
திருவண்ணாமலை, செப். 27: நான்கரை ஆண்டுகளில் திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ104 கோடியில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை 4வது வார்டு, புதுத்தெருவில் நடந்த விழாவில் 573 பயனாளிகளுக்கு இலவச கேஸ் அடுப்புகளை திங்கள்கிழமை வழங்கி அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பணக்காரர்கள் வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் பெற்றுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது திருவண்ணாமலை நகராட்சிக்கு 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ17.45 கோடி. ஆனால் நான்கரை ஆண்டுக்கால திமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
29 லட்சம் பேருக்கு இலவச கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் மூலம் 1.8 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதிமுக ஆட்சியில் உணவு மானியமாக |1200 கோடி ஒதுக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி ரூ3750 கோடி ஒதுக்கி உள்ளார்.
நகராட்சி சாலைகளை சீரமைக்கும் திட்டத்துக்காக துணை முதல்வர் ஸ்டாலின் ரூ1000 கோடி ஒதுக்கி உள்ளார். இதில் திருவண்ணாமலை நகராட்சிக்கு மட்டும் ரூ5 கோடி கிடைத்துள்ளது.
நல்ல திட்டங்களை நிறைவேற்றியவர்கள் என சீர்தூக்கி பார்த்து மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார் அமைச்சர் வேலு.
மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன், மக்களவை உறுப்பினர் த.வேணுகோபால், எம்னல்ஏ கு.பிச்சாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சி.கதிரவன், நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகர்மன்ற உறுப்பினர் ஷாஜகான், ஆணையர் ஆர்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.