தினகரன் 30.09.2010
சித்தூர் நகராட்சியில் ரூ80 கோடிக்கு வளர்ச்சி பணிகள்
சித்தூர், செப்.30: சித்தூர் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ80 கோடிக்கு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது என எம்எல்ஏ சி.கே. பாபு பெருமிதத்துடன் கூறினார். ஆந்திராவில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதுதொடர்பாக சித்தூர் நகராட்சி மன்ற கடைசிக் கூட்டம் அதன் தலைவி சரளாமேரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்எல்ஏ சி.கே. பாபு பேசியதாவது:
கடந்த 5 ஆண்டு காலத்தில் சித்தூர் நகராட்சியில் ரூ 80 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் மிகச் சிறந்த முறையில் கடந்த 5ஆண்டு காலத்தில் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் நகராட்சி செயல்பட்டுள்ளது. சித்தூரில் அனைத்தும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. கூடுதல் டேங்கர் டிராக்டர் மூலம் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளோம். பல பள்ளிகளில் கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், காய்கறி மார்க்கெட்டுகள் கட்டப்பட்டுள்ளன. ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அரசு நலத் திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நகராட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் சிறப்பு அதிகாரிகள் மூலம் தேர்தல் நடைபெறும் வரை அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஆணையாளர் எஸ்.எஸ். வர்மா, கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சித்தூர் நகராட்சி மன்ற கடைசிக் கூட்டம் அதன் தலைவர் சரளாமேரி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற எம்எல்ஏ சி.கே. பாபு, ஆணையாளர் எஸ்.எஸ். வர்மா மற்றும் கவுன்சிலர்கள்.