தினகரன் 01.10.2010
பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி
பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பட்டுக்கோட்டை நகராட்சி சாதாரணக் கூட்டம் தலைவர் பிரியஇளங்கோ (தி.மு.க) தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் கண்ணன், ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு; சகுந்தலா (தி.மு.க.); எனது 12வது வார்டில் குடிதண்ணீருடன் சாக்கடை கலந்து வருகிறது. (சாக்கடை கலந்த தண்ணீரை ஒரு சிறிய பாட்டிலில் எடுத்துவந்து நகராட்சி கூட்டத்தில் காண்பித்தார்).
வீரையன் (தி.மு.க.):
தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நமது நகரத்தில் பரவுவதற்குள் வீடு, வீடாக தடுப்பூசி போட வேண்டும்.
செல்லநாகராஜன் (அ.தி.மு.க):
தமிழகத்தில் பன்றிகாய்ச்சலுக்கு இதுவரை 78 பேர் பலியாகி உள்ளனர். நமது பகுதியில் பன்றிகாய்ச்சல் பரவாமல் இருக்க பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் முகாம் கலெக்டர் உத்திரவிட வேண்டும். கடந்த 6 மாதங்களாக இறைச்சி கூடத்தில், ஒரு ஆட்டிற்கு கூட (தொடை பகுதியில்) நகராட்சி சீல் வைக்கப்படவில்லை. அப்படி சீல் வைக்கப்பட்டது என்றால் நான் என்னுடைய கவுன்சிலர் பதவியை ராஜினமா செய்கிறேன் என்றார்.
ஜோதிமணி (அ.தி.மு.க.):
நோய்வாய்பட்ட, அடிபட்ட, இறந்த ஆடுகளையும் வெட்டுகிறார்கள்.
சம்பத் (அ.தி.மு.க.):
எனது வார்டில் ஒரு வாரகாலமாக 7 விளக்குகள் எரியவில்லை. சத்துணவு மையம் அருகே உள்ள வடிகால் வாய்க்காலில் நிறைய பூச்சிகள் உள்ளது. உடனே அந்த பூச்சிகளை அழிக்க வேண்டும்.
ஜவஹர்பாபு (அ.தி.மு.க.):
எனது வார்டுக்கு இந்த 4 ஆண்டில் ரூ. 6.5 லட்சத்திற்கு மட்டும் வேலைகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கண்வாடி அமைக்க பலமுறை தபால் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த வேலைகளும் நடைபெறவில்லை என்றால் சாலைமறியல் செய்வோம் என்றார்.
அழகேசன் (தி.மு.க.):
எனது வார்டில் பி.எஸ்.என்.எல் கேபிள் பதிக்கும் போது 3 சாலைகள் சேதமடைந்துள்ளது. மழைக்காலம் தொடங்க இருப்பதால் உடனே சேதமடைந்த சாலைகளை செப்பணிட வேண்டும்.
துணைத்தலைவர் கண்ணன்:
3,4,5,6,7, ஆகிய 5 வார்டுகளிலிருந்து வரும் சாக்கடைகள் போக வழியில்லாமல் சாலைகளில் அங்கும் இங்குமாக தேங்கி நிற்கிறது. இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி தலைவர் பிரியாஇளங்கோ:
உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் அரசு வழங்கும் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைப்பது, நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என ரூ.5 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என்பது உள்பட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தீர்மானம்.