தினமணி 06.10.2010
திருப்பத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அமைச்சரிடம் வலியுறுத்தல்
திருப்பத்தூர், அக். 5: தேர்வுநிலைப் பேரூராட்சியாக இருக்கும் திருப்பத்தூரை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தித் தர வேண்டும் என பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா என்று அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
திருப்பத்தூர் பேரூராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் என்.எம்.சாக்ளா, துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். அனைவரையும் செயல் அலுவலர் அமானுல்லா வரவேற்றார்.
இதில் கவுன்சிலர்கள் முருகானந்தம், சுப்புலெட்சுமி, பதிகண்ணன், நாகராஜன், சோமசுந்தரம், கவிதாகுமார், ஜிம்கண்ணன், ரஹமத்துல்லா, யாசின், காளிமுத்து, சரவணப்பெருமாள் ஆகியோர் தங்கள் வார்டுகளில் உள்ள நிறைகுறைகள் பற்றி அமைச்சரிடம் கலந்தாய்வு மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அவர் பேசினார். மீண்டும் அனைத்து வார்டுகளுக்கும் சாலைகள், மின் விளக்கு, கழிவுநீர் துப்புரவுப் பணிகள் முதலியன சரிசெய்யப்படும் என்றும், 1-வது வார்டுக்கு பேருந்து நிழற்குடை அமைக்க உத்தரவிட்டும், 17-வது வார்டுக்கு உள்பட்ட காமராஜர் காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாயக் கூடம் அமைக்க தனது சொந்த நிதியில் ரூ. 2 லட்சம் வழங்கினார். தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா, தேர்வுநிலைப் பேரூராட்சியாக இருக்கும் திருப்பத்தூரை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தித் தர வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
அதேபோல் அனைத்து வார்டு கவுன்சிலர்களிடமும் கலந்தாய்வு மேற்கொண்டு குறைகளை சரிசெய்ய அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தை 4 பெண் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இதில் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், முருகேசன், மின் துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.