தினமணி 06.10.2010
வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
பெரம்பலூர், அக். 5: பெரம்பலூரில் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், ரூ. 3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடத்தைத் தொடக்கி வைத்து, சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ், ரூ. 3 கோடியில் தார்ச் சாலை அமைப்பதற்கான நிர்வாக அனுமதிச் சான்றிதழை அளித்த அமைச்சர் ராசா, அப்பகுதியை பார்வையிட்டு, தெப்பக்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தரமான நடைபாதை அமைக்கவும், பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும், புதை சாக்கடைத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம. ராஜ்குமார், நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா, துணைத் தலைவர் கி. முகுந்தன், நகராட்சி ஆணையர் (பொ) கருணாகரன், அரசு வழக்குரைஞர் என். ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ. அப்துல்பாரூக், கே.ஜி. மாரிக்கண்ணன், கி. கனகராஜ், என். ஜயக்குமார், ஜே.எஸ்.ஆர். கருணாநிதி, எம். ரஹமத்துல்லா, எஸ். சிவக்குமார், ஆர். ஈஸ்வரி, கே.புவனேஸ்வரி, பொற்கொடி ஞானசேகரன், பி. கண்ணகி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், பணி மேற்பார்வையாளர்கள் ராகவன், மோகன், கோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.