தினகரன் 04.11.2010
ஆவடி பகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
ஆவடி, நவ.4: ஆவடி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் விக்டரி மோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அப்துல் ரகீம், ஆணையர் ராமமூர்த்தி, பொறியாளர் குருசாமி, சுகாதார அதிகாரி மோகன் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி தலைவர் விக்டரி மோகன் பதிலளித்து பேசியதாவது:
கோவில்பதாகை, திருமுல்லைவாயல், கோனாம்பேடு, காமராஜர்நகர் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளிகளை சீரமைக்க ரூ41 லட்சமும், சோழம்பேடு கணபதி நகர், ஆவடி ராமதாஸ் நகர், காமராஜர் நகர், பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியில் ரூ17.5 லட்சத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்டாபிராம் முதல் திருமுல்லைவாயல் வரை சிடிஎச் சாலையில் மின் விளக்கு அமைக்கவும், ஆவடி&பூந்தமல்லி சாலையில் மின் விளக்கு அமைக்கவும் ரூ37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் ரூ24.5
லட்சத்தில் பயிற்சிகூடம் கட்டப்படும். திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை, மூன்று நகர், பாரதி நகர், மூர்த்தி தெரு பகுதிகளில் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ42 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.