தினமணி 13.12.2010
ரூ. 543 கோடி மதிப்பீட்டில் 7 திட்டப் பணிகள்: முதல்வர் கருணாநிதி
சென்னை, டிச. 12: கோவையில் ரூ. 543 கோடியில் மேம்பாலம், செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட 7 திட்டங்களுக்கு முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் கருணாநிதியின் கோவை பயணம் ரத்து செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ்மூலம் இந்தத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியது:
கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, மூன்றடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கோவை காந்திபுரம் பகுதியில் பஸ் நிலையங்களும், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் கோவை காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காந்திபுரத்தில் நஞ்சப்பா சாலையில் தொடங்கி, கிராஸ் கட் சாலை சந்திப்பு, நூறடிச் சாலை சந்திப்பு, சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் செல்லக் கூடிய வகையில் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு ரூ. 148 கோடியில் மேம்பாலம் கட்டும் திட்டம் தொடங்கப்படுகிறது.
கோவை பழைய சிறைச்சாலை அமைந்துள்ள 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போதுள்ள சிறைச்சாலையை வேறு இடத்தில் மாற்றுவதற்காக, கோவைக்கு அருகில் வெள்ளலூர் என்னும் இடத்தில் 75 ஏக்கர் வழங்க கோவை மாநகராட்சி முன்வந்துள்ளது.
அந்த இடத்துக்கு சிறைச்சாலையை மாற்றிய பிறகு 165 ஏக்கர் நிலத்தில் சர்வதேச தரத்திலான செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, கட்டடங்கள் இல்லாத 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 20 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாயைச் சீரமைக்க ரூ. 185 கோடி செலவிலான திட்டம், கோவை மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழாவையொட்டி, ரூ. 50 கோடி செலவில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட கட்டடம், 250 மாணவ, மாணவியர் தங்கும் விடுதி கட்டும் திட்டம் ஆகியவை இன்று தொடங்கப்படுகின்றன.
கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு சோமையம்பாளையத்தில் 131 ஏக்கரில் ரூ. 67 கோடி மதிப்பில் கட்டடங்கள் கட்டும் திட்டம், கோவை ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் திறனை நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டராக உயர்த்தும் வகையில் 28 கோடியில் நவீனமயப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டமும், ரூ. 25 கோடியில் தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்துக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. கோவை மாநகருக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் அரசு திட்டமிட்டுள்ள புதிய கட்டமைப்புகள் அனைத்தையும் அதிகாரிகள் குறித்த நேரத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளித்துறை மேலாண்மைக் கல்வி நிறுவனக் கட்டடமும், கலையரங்கமும் விழாவில் திறந்துவைக்கப்பட்டன. மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், சட்ட அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.