தினகரன் 15.12.2010
சட்டப்பேரவையில் முதல்வர் தகவல் : மும்பை நகருக்கு புதிய வளர்ச்சி திட்டம்
நாக்பூர், டிச. 15: மும்பை நகரின் மேம்பாட்டுக்காக புதிய வளர்ச்சி திட்டம் வகுக்கப்படும் என்று முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமீன் பட்டேல், பாபா சித்திக்கி, மது சவான் ஆகியோர் பேசுகையில், மும்பை நகரின் வளர்ச்சியில் மும்பை மாநகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என்றும் மாநகராட்சி செயல்படுத்தும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியதாவது;
மும்பை மாநகராட்சி நிர்வாகம் தனது கடந்த மூன்று ஆண்டு கால வரவு செலவு அறிக்கையை இன்னும் இறுதி செய்யவில்லை.
2007&08ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை அடுத்த 2 மாதத்திற்குள் அரசிடம் தாக்கல் செய்யவும், 2008&09, 2009&10ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை 2011 ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் மாநகராட்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளை அரசு கவனமாக ஆராய்ந்து, முறைகேடுகள் செய்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசின் சில திட்டங்களை நிறைவேற்ற மும்பை மாநகராட்சி அனுமதி கோரியிருந்தது. ஆனால், அந்த திட்டங்களை நிறைவேற்றும் அளவுக்கு மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகுதியோ, ஆள் பலமோ இல்லை.
மும்பை நகரின் வளர்ச்சி குறித்து அரசு அதிக சிரத்தை எடுத்து செயல்பட்டு வருகிறது. மும்பையின் மேம்பாட்டுக்காக விரைவில் புதிய வளர்ச்சி திட்டம் வகுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.