தினமணி 08.08.2012
ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு
சென்னை, ஆக., 08 : “ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தின்படி, இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டிலும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட, சென்னை தவிர பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 500 கோடி ரூபாயும், பேரூராட்சிகளுக்கு 250 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சிகளின் அலுவலகங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகைப் புரிவதைக் கருத்தில் கொண்டும், பழைய கட்டடங்களில் இயங்கி வரும் பேரூராட்சி அலுவலகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமையக்கும் பொருட்டும், எல்லா பேரூராட்சிகளுக்கும் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டித்தர முதலமைச்சர் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டத்திலுள்ள பென்னாத்தூர் பேரூராட்சி, சேலம் மாவட்டத்திலுள்ள பனைமரத்துப்பட்டி பேரூராட்சி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பண்ணைக்காடு பேரூராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிப்பாளையம் மற்றும் பள்ளப்பாளையம் பேரூராட்சிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை மற்றும் வெங்கம்பூர் பேரூராட்சிகள், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி மற்றும் சாயல்குடி பேரூராட்சிகள், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு, திருக்குருங்குடி, பத்தமடை மற்றும் திசையன்விளை பேரூராட்சிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரல்வாய்மொழி பேரூராட்சி என 15 பேரூராட்சிகளுக்கு அலுவலகக் கட்டடம் கட்ட பேரூராட்சி ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாய் வீதம் 6 கோடி ரூபாயும், திருநெல்வெலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு 1 கோடி ரூபாயும் என மொத்தம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகளினால், தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மேம்படவும், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மேன்மை அடைவதற்கும் வழிவகை ஏற்படும் என்றும் தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.