தினமலர் 24.08.2012
விழுப்புரம் நகராட்சியில் முதல்வர் ஜெ., உத்தரவுபடி வளர்ச்சிப் பணிகள்
விழுப்புரம்:முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளவாறு விழுப்புரம் நகராட்சியில் மக்களின் தேவையறிந்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் பாஸ்கரன் பேசினார்.விழுப்புரம் நகராட்சியின் சாதாரனக் கூட்டம் சேர்மன் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன், பொறியாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு விழுப்புரம் நகர வளர்ச்சிப் பணிக்கு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டம் 2012-13ம் ஆண்டிற்காக 3 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெ., விற்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் பின் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராமதாஸ், செந்தில், ஷாகுல் அமீது, செந்தில்குமார், ராஜா, மணவாளன், நாராயணசாமி, சேகர், ராமச்சந்திரன் ஆகியோர் தங்கள் வார்டு பகுதிகளில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகள், குடிநீர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் பஸ் நிலையத்தில் கட்டணம் வசூல் செய்தல், நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளிட்ட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக சேர்மன் பாஸ்கரன் பேசியதாவது:கவுன்சிலர்களின் கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சியுடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6 வார்டுகளுக்கு தேவையான குடிநீர் வசதி, தெரு மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்படும்.
மக்களின் தேவையறிந்து அரசு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் குறைகளை தீர்க்க வேண்டும் என முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப விழுப்புரம் நகராட்சி சிறப்பாக செயல் படும். இவ்வாறு சேர்மன் பாஸ்கரன் பேசினார்.