தினமணி 25.08.2012
வளர்ச்சிப் பணிகள்: மாநகர மேயர் ஆய்வு
திருச்சி, ஆக. 24: திருச்சி மாநகராட்சி அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியமங்கலம் கோட்டம் 26-வது வார்டு காஜாபேட்டை தொடக்கப் பள்ளிக் கட்டடம் பழுதுநீக்கம் செய்ய வேண்டிய பணிகள், சங்கிலியாண்டபுரம் முக்கிய சாலை சந்திப்பில் மேற்கொள்ள வேண்டிய சாக்கடை வடிகால் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
பொன்மலைக் கோட்டம் 43-வது வார்டு செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் சமுதாயக்கூடம் அருகே மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிப்பறை, காஜா நகரில் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், 42-வது வார்டு சுந்தர்நகரில் நடைபெற்ற ரூ. 4 லட்சத்தில் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணி, கிருஷ்ணமூர்த்தி நகரில் சாலை, மழைநீர் வடிகால் மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர்.கோ-அபிஷேகபுரம் கோட்டம் 54-வது வார்டில் ராமலிங்கநகர் 1-வது சாலை மற்றும் சாக்கடை நீர் வடிகால் மேம்பாடு செய்தல், நெசவாளர் காலனி, களத்துமேடு பகுதிகளில் சாலை மேம்பாடு செய்தல் ஆகியவற்றையும் இவர்கள் பார்வையிட்டனர்.இந்த ஆய்வின்போது துணை மேயர் ம. ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், என். மனோகரன், ஆர். ஞானசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.