தமிழ் முரசு 07.06.2013
சிங்கப்பூர் போல மாறுது கோயம்புத்தூர்
கோவை: சிங்கப்பூரில் உள்ளாட்சி நிர்வாகங்களின் செயல்பாடுகளை பார்வையிட
இந்தியாவில் இருந்து கோவை மேயர் வேலுச்சாமி, கமிஷனர் லதா உள்பட 11
மாநகராட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சென்றனர். சிங்கப்பூரில் இருந்து
திரும்பிய கோவை மேயர் கூறியதாவது: வசிக்க தகுந்த நாடுகள் பட்டியலிலும்
சிங்கப்பூர் 2வது இடத்தில் உள்ளது. மொத்த பரப்பில் 40 சதவீதம் பசுமையாக
உள்ளது. 94 சதவீத மக்கள் அரசு வழங்கிய வீடுகளில் வசிக்கின்றனர். 99 ஆண்டு
ஒப்பந்த அடிப்படையில் அரசே வீடு வழங்கியுள்ளது. 6 சதவீதத்தினர் மட்டுமே
சொந்த வீட்டில் வசிக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூர் அபார
வளர்ச்சி பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படும் திட்டங்களை கோவையிலும் நிறைவேற்ற முடிவு
செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தினமும் 2 ஆயிரம் டன் குப்பையில் இருந்து
20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்றனர். கோவையில் தினமும் 800 டன் குப்பை
சேகரிக்கப்படுகிறது. 400 டன் மறுசுழற்சிக்கு உதவாது. மீதமுள்ள 400 டன்
குப்பையை எரித்து அதில் இருந்து தினமும் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க
திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல அனைத்து மாநகராட்சி மற்றும் தனியார்
கட்டிடங்களில் சோலார் பிளான்ட் அமைத்து மின்சாரம் தயாரிக்கவும் திட்டம்
உள்ளது. 24 மணி நேர குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து
மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொலைநோக்கு பார்வையுடன்
சிங்கப்பூரில் அமல்படுத்துவது போல கோவையிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக புதிய மாநகர மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு
மேயர் கூறினார்.