தினமணி 1.10.2009
ரூ 22.23 கோடியில் அரியலூரை அழகுபடுத்தும் பணி
அரியலூர், செப் 30: ரூ 22.23 கோடியில் அரியலூர் நகராட்சியை அழகுபடுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்ப நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூர் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் விஜயலெட்சுமி செல்வராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நகர்மன்ற நிர்வாக அதிகாரி டி. சமயச்சந்திரன், நகர்மன்றத் துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பேருந்து நிலைய வளாகத்தில் ரூ 2.71 கோடியில் அலங்கார வளைவு, சிமென்ட் தளம், நவீனக் கழிப்பறைகள் அமைக்கும் பணி, அமரர் பூங்காவில் ரூ. 40 லட்சத்தில் நவீன தகன எரிவாயு மேடை, காந்தி மார்க்கெட்டில் ரூ. 20 லட்சத்தில் நவீன ஆடு அடிக்கும் தொட்டி அமைத்தல், 3 ஆயிரம் கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை, காந்தி மார்க்கெட்டில் ரூ. 18 லட்சத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல்,
ரூ. 25 லட்சத்தில் ஜெயங்கொண்டம், பேருந்து நிலைய உட்புறம், திருச்சி சாலை, பெரம்பலூர், செந்துறை சாலை முகப்புகள் மற்றும் அண்ணாசாலை ஆகிய இடங்களில் நீருற்று அமைக்கும் பணி.
ரூ 2.5 கோடியில் பழுதடைந்த கொள்ளிடம் குடிநீர்க் குழாயை மாற்றியமைத்தல், ரூ. 50 லட்சத்தில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் என்.சிவஞானம், தனது வார்டுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லையென்று கூறி நகர்மன்ற கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி கூட்ட அரங்கில் இருந்தார்.
கூட்டத்தில் நகராட்சித் தலைமை அலுவலர் என். குமரன், நகர்மன்ற உறுப்பினர்கள் த. ராமமூர்த்தி, எம். ராஜா, மாலா ஆ. தமிழரசன், ஆ. குணா, ஐ.பி. மணிவண்ணன், அமுதலெட்சுமி காசிநாதன், ஏ.பி.எஸ். பழனிசாமி, எஸ்.எம். சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.