தினமணி 2.11.2009
தேனி மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகளில் ரூ. 140 கோடி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்
தேனி, நவ. 1: தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ. 140 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் பி. முத்துவீரன் தெரிவித்தார்.
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்து, பரிசுகள் வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி ஆண்டுதோறும் நவம்பர் முதல் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ. 20 கோடியில் 1,508 பணிகள் நடைபெற்றுள்ளன.
ரூ. 31.50 கோடியில் 12,230 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் 12-வது நிதிக்குழு மான்யத் தொகையில் இருந்தும் ரூ. 23.45 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் அனைத்துப் பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ. 35 கோடியில் 1,140 பணிகள், நகராட்சிகளில் ரூ. 70 கோடியில் 1,410 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.
விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சச்சிதானந்தன், பேரூராட்சித் தலைவர் வித்யா, செயல் அலுவலர் செந்தில்குமார், துணைத் தலைவர் உதயசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.