தினமணி 18.11.2009
மு.க. ஸ்டாலின் விழாவில் ரூ. 209 கோடிக்கு திட்டங்கள்
தூத்துக்குடி, நவ. 17: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 19-ம் தேதி தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாக்களில் ரூ. 209.24 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 19-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது திறக்கப்படவுள்ள திட்டங்கள், அடிக்கல் நாட்டவுள்ள புதிய பணிகள், வழங்கப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
திறக்கப்படவுள்ள பணிகள்
ஏற்கனவே நிறைவு பெற்ற பல பணிகளை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ. 13.53 கோடி மதிப்பிலான 534 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 1.55 கோடி மதிப்பிலான 7 பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 75.65 கோடி மதிப்பிலான 79 பணிகள், பொதுப்பணித்துறை மூலம் ரூ. 25.27 கோடி மதிப்பிலான 13 பணிகள் என மொத்தம் ரூ. 116 கோடி மதிப்பிலான 623 பணிகளை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் 534 கட்டடப்பணிகள், 8 குடிநீர் பணிகள், 79 பாலங்கள், 2 இதர பணிகள் அடங்கும்.
அடிக்கல் நாட்டவுள்ள பணிகள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 8.02 கோடி மதிப்பிலான 135 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 88 லட்சம் மதிப்பில் 5 பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 11.92 மதிப்பீட்டில் திருச்செந்தூர் பேரூராட்சிக்கான குடிநீர் திட்டம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 29.68 மதிப்பிலான 3 பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 9.72 கோடி மதிப்பிலான 18 பணிகள், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பில் ரூ. 7.21 கோடி மதிப்பில் 6 பணிகள், மீன்வளத்துறை சார்பில் ரூ. 11.79 கோடி மதிப்பில் 2 பணிகள் என மொத்தம் ரூ. 79.22 கோடி மதிப்பிலான 170 பணிகளுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார். இதில், 152 கட்டடப் பணிகள், 10 குடிநீர் திட்டப்பணிகள், 3 பாலங்கள், 5 இதர பணிகள் அடங்கும்.
நலத்திட்ட உதவிகள்:
மகளிர் திட்டம் மூலம் 1125 பேருக்கு ரூ. 7.28 கோடி, ஊரக வளர்ச்சி துறை சார்பில் 183 பேருக்கு ரூ. 86.62 லட்சம், வருவாய் நிர்வாகத் துறை சார்பில் 219 பேருக்கு ரூ. 86.69 லட்சம், வருவாய் நிர்வாகத்துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2,462 பேருக்கு ரூ. 29.76 லட்சம், தொழிலாளர் நலத்துறை சார்பில் 656 பேருக்கு ரூ. 14.79 லட்சம், சுகாதாரத்துறை சார்பில் 3,963 பேருக்கு ரூ. 2 கோடி, சமூக நலத்துறை சார்பில் 400 பேருக்கு ரூ. 80 லட்சம், ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை சார்பில் 1,514 பேருக்கு ரூ. 1.11 கோடி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 193 பேருக்கு ரூ. 19.05 லட்சம் உள்ளிட்ட 15 துறைகள் சார்பில் 11,0002 பேருக்கு ரூ. 14.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மொத்தத்தில் திறக்கப்படவுள்ள பணிகள் ரூ. 116 கோடி, அடிக்கல் நாட்டவுள்ள பணிகள் ரூ. 79.22 கோடி, நலத்திட்ட உதவிகள் ரூ. 14.02 கோடி என மொத்தம் ரூ. 209.24 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் அன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ளன.