தினமணி 07.01.2010
மகாபலிபுரத்தை மேம்படுத்த ரூ.13 கோடி ஒதுக்கீடு
புதுதில்லி, ஜன.6:தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மகாபலிபுரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய சுற்றுலா அமைச்சகம் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் 29 இடங்களை கண்டறிந்து அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அதன் மேம்பாட்டுக்காக பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மகாபலிபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மேம்பாட்டுக்காக சுற்றுலா அமைச்சகம் ரூ.13.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் சுற்றுலாத் திட்டங்களை மேற்கொள்வதற்கு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களுக்கு சுற்றுலா அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் மெகா திட்டங்கள் உள்பட 106 திட்டங்களுக்கு ரூ.398.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.