தினமணி 04.02.2010
மாநகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்
திருநெல்வேலி, பிப். 3: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
மாநகராட்சிப் பகுதியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி தொடக்கிவைக்கப்பட்ட பணிகள் விவரம்: தச்சநல்லூர் மண்டலத்துக்கு உள்பட்ட வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் முதல் கொக்கிரகுளம் ரோஸ் மகால் வரை ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தொடக்கிவைத்தார். மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன், மண்டலத் தலைவர்கள் பி. சுப்பிரமணியன், எஸ்.எஸ். முகம்து மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலப்பாளையம் மண்டலத்தில் அழகிரிபுரத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
காட்டு செக்கடித் தெருவில் ரூ. 19 லட்சம் மதிப்பீட்டிலும், ஆசூரா மேலத்தெருவில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலும் வடிகால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
புதிய பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்க அடிகுழாய் அமைக்கும் இடத்தை மேயர் பார்வையிட்டார்.
மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன், மாநகரப் பொறியாளர் கொ. பொ. ஜெய்சேவியர், செயற்பொறியாளர் வி. நாராயணன் நாயர் ஆகியோர் கலந்துகொண்டனர்