Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ரூ.300 கோடியில் கட்டமைப்பு பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன் 08.02.2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ரூ.300 கோடியில் கட்டமைப்பு பணிகள் தீவிரம்

கோவை: கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் கட்டமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு அலுவலர் அலாவுதீன் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, அரசு போக்குவரத்துக் கழக கோட்ட இயக்குனர் பால்ராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மைப் பொறியாளர் ராஜாமணி, மின் வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு, மாவட்ட எஸ்.பி. கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பணிகளை விரைவாக முடிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர், அலாவுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநாட்டையொட்டி, கோவையில் பல்வேறு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.60 கோடியில் சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்க பணிகள் நடக்கிறது.

மாநாடு நடைபெற உள்ள கொடிசியா வளாகத்தில் ரூ.2.25 கோடியில் மண் நிரப்பும் பணி நடைபெற உள்ளது. மாநகராட்சி சார்பில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மாநகர சாலைகள் மேம்படுத்தப்படும். கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.55 கோடியில் மின் வாரியம் மூலம் புதை மின்வடம் அமைக்கப்படுகிறது. அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் காமராஜர் சாலை உயரழுத்த மின்கம்பி இல்லாத பகுதியாக மாறும்.

மாநகராட்சி நிதியில் இருந்து பூங்கா, திடல் அமைக்கப்படுகிறது. மேலும் 18 இடங்களில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புப் பணிகள் ஏப்ரலில் முடிவடையும். மீதமுள்ள பணிகள் மே இறுதிக்குள் முடிக்கப்படும்
.

கோவையில் ரயில் நிலையத்தில் கூரை அமைக்கவும், ரூ.7 கோடி மதிப்பீட்டில் பயணிகள் நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.300 கோடியில் மாநாட்டு கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கட்டுரைகள் ஆய்வுப்பணி கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தில் அளிக்கப்படவுள்ள கட்டுரைகளின் ஆய்வு சுருக்கங்கள், பொருள் வாரியாக பிரிக்கப்பட்டு, நுண்ணாய்வு செய்யும் பணி சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் நேற்று தொடங்கியது. ஆய்வு பணியில் 165 அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated on Monday, 08 February 2010 11:30