தினமணி 03.03.2010
அழகப்பபுரம் பேரூராட்சியில் ரூ. 26.60 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்
நாகர்கோவில், மார்ச் 2:அழகப்பபுரம் பேரூராட்சியில் ரூ. 26.60 லட்சத்தில் திட்டப் பணிகளை, அமைச்சர் என். சுரேஷ்ராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
இப் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், தினசரி சந்தை மேம்பாடு, நியாயவிலைக் கடை, உயர்கோபுர மின்விளக்கு, பயணிகள் நிழற்குடை உள்ளிட்டவற்றை அமைச்சர் திறந்துவைத்தார். மேலும் 2-ம் கட்டமாக இலவச டிவிக்கள் வழங்கும் நிகழ்ச்சி அழகப்பபுரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 887 பேருக்கு டிவிக்களை வழங்கி அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டால் கிராம பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றபின் அழகப்பபுரம் பேரூராட்சியில் மட்டும் இதுவரை ரூ. 3 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. இப்பேரூராட்சியில் முதற்கட்டமாக 1,614 பேருக்கு இலவச டிவி வழங்கப்பட்டது என்றார் அமைச்சர்.
அழகப்பபுரம் அருகேயுள்ள நிலப்பாறை வழியாக தடம் எண் 3 பி.வி. பஸ் நாகர்கோவிலில் இருந்து காலை 6.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்பட்டு வந்தது.
இந்த பஸ்ûஸ காலை 8.30 மணிக்கும், மாலை 4.15 மணிக்கும் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் வழித்தடத்தையும் அமைச்சர் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் டேவிட் வரவேற்றார். தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் தாமரைபாரதி வாழ்த்திப் பேசினார். செயல் அலுவலர் அகஸ்திலிங்கம் நன்றி கூறினார்.