தினமணி 09.03.2010
கொடைக்கானல் நகராட்சி படகு குழாமில் கூடுதல் படகு இயக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
கொடைக்கானல், மார்ச் 8: கொடைக்கானல் நகராட்சி சார்பில் கே.ஆர்.ஆர். கலையரங்கம்அருகில் உள்ள ஏரிப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சிப் படகு குழாம் ஆரம்பிக்கப்பட்டது.
படகு குழாமில் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் படகுகள் இருந்தன. இதுவரை கூடுதல் படகுகள் இயக்கப்படவில்லை. விடுமுறை நாள்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் நேரங்களில் நீண்ட நேரம் அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் கொடைக்கானல் ஏரியில் தனியார் படகு குழாம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை படகு குழாம் உள்ளது. அவற்றில் கூடுதலான படகுகள் மற்றும் நவீன படகுகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் தனியார் படகு குழாமிற்குச் செல்கின்றனர். எனவே நகராட்சி படகு குழாமில் கூடுதலான மற்றும் நவீன படகுகள் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டு கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. தற்போது 6 படகுகளும், சிக்கார படகு ஒன்றும் உள்ளது. மேலும் படகு குழாமை நவீனப்படுத்தவும், தனியார் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை படகு குழாம்களில் உள்ளது போல நவீன மற்றும் சிக்கார படகுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் சீசனுக்குள் நகர்மன்றத்தின் அனுமதி பெற்று புதுப்பொலிவுடன் நகராட்சிப் படகு குழாம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.