தினமணி 01.04.2010
பெரியார் மேம்பாலம் அருகில் புதிய பூங்கா திறப்பு
சேலம், மார்ச் 31: சேலம் பெரியார் மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவை மேயர் ரேகா பிரியதர்ஷிணி புதன்கிழமை திறந்து வைத்தார்.
காந்தி விளையாட்டு மைதானத்துக்கு எதிரில் மேம்பாலத்தையொட்டி மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் காலியாக இருந்தது. இதில், சேலம் சிவில் என்ஜினீயர்கள் சங்கத்தினர் ரூ.10 லட்சம் செலவில் பூங்கா அமைக்க முன்வந்தனர்.
இதையடுத்து இரும்பு வேலி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள், புல் நாற்றுகள் நடப்பட்டு புதிய பூங்கா உருவாக்கப்பட்டது.
மேயர் ரேகா பிரியதர்ஷிணி இதைத் திறந்து வைத்தார். அவர் பேசும்போது, இந்தப் பூங்காவை மாநகர பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல் பல இடங்களிலும் பூங்காக்கள் அமைக்க தனியார் முன் வர வேண்டும் என்றார். மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, துணை மேயர் பன்னீர்செல்வம், என்ஜினீயர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், திட்டக் குழுத் தலைவர் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்