தினமலர் 13.04.2010
சென்னையை சுற்றி நான்கு நகர்ப்புற திட்டங்கள்: ஸ்டாலின்
சென்னை : ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், சென்னையைச் சுற்றி புதிதாக நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், மாநில அளவிலான ஒப்புதல் அளிக்கும் கூட்டம், துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 3,900 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 39 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 838 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட எட்டு திட்டங்கள், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 826 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஐந்து திட்டங்கள் ஆகியவை குறித்தும் துணை முதல்வர் ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில், 195 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேலும் நான்கு புதிய திட்டங் களுக்கு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு தேவையை கருத்தில் கொண்டு, நாள் ஒன்றுக்கு 12 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 130 கோடி ரூபாய் செலவில் சென்னை கோயம்பேட்டில் ஏற்படுத்தப் படுகிறது.
சென்னை நகரை ஒட்டியுள்ள மணப்பாக்கம் ஊராட்சியில், நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கான தொலைநோக்குடன் 10 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் மற்றொரு திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.மணப்பாக்கம் குடிநீர் திட்டத்தால் வெளியேறும் கழிவுநீரை கருத்தில் கொண்டு, 26 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் அந்த ஊராட்சிக்கு வழங்கப் படுகிறது.தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள உள்ளாட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் கழிவுநீரை, சாலையின் வழியாக வெளியேற்ற, 14 நிலையங்களை 28.05 கோடி ரூபாயில் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.