தினமலர் 16.04.2010
ராஜாஜி சிறுவர் பூங்கா சீரமைக்க நடவடிக்கை : தினமலர் செய்தி எதிரொலி
மதுரை : மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில், சேதமடைந்த விளையாட்டு சாதனங் களை சீரமைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.கோடை விடுமுறையில் ராஜாஜி பூங்காவிற்கு வரும் சிறுவர்கள், விளையாட முடியாத நிலையில், பல விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்தும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக, தினமலர் இதழில், கடந்த வாரம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ராஜாஜி பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு சாதனங்களை ஆய்வு செய்தனர். ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டு சாதனங்களை பயன்படுத்த, அனுமதிக்க வேண்டாம், என பூங்கா குத்தகைதாரர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சேதமடைந்த விளையாட்டு சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.