தினமணி 23.04.2010
நகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
அரியலூர், ஏப் 22: அரியலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், அரியலூர் நகராட்சியில் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ரூ. 1 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழல்குடையை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், நிழல்குடையை தரமானதாகவும், உறுதியாகவும் கட்ட வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், சடையப்பன் மற்றும் சேர்வைத்தெரு பகுதியில், டீக் கடை, பெட்டிக்கடை உரிமையாளர்களிடம் நகராட்சி அனுமதி பெற்று கடைகள் நடத்தப்படுகின்றனவா என்பது குறித்தும், அனுமதி பெறாமல் இயங்கும் கடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், கல்லக்குடியில் ரூ. 3 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மகளிர் பொதுக் கழிப்பறையை ஆய்வு செய்த ஆட்சியர், தற்போது பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பறையை சுகாதாரமாகவும், போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி, கழிப்பறையை சுற்றி உள்ள முள் புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ வசதி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை கேட்டறிந்து, அலுவலர்களின் வருகைப் பதிவேடு, மருந்து வழங்கும் பதிவேடு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆட்சியர் ஆபிரகாம்.
இந்த ஆய்வுகளின் போது, அரசு தலைமை மருத்துவர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் சமயச்சந்திரன், பொதுப் பணி மேற்பார்வையாளர் பாண்டு, பொறியாளர் நிலேஸ்வரன், மருத்துவர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்