தினமலர் 30.04.2010
5 லட்சத்தில் திட்டப்பணிகள்:போளூர் பேரூராட்சியில் தீர்மானம்
போளூர்:போளூர் பேரூராட்சியில் 5 லட்சம் ரூபாய் செலவில் பல புதிய பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.போளூர் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ரங்கா விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் வாசுதேவன், துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர்முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் போளூர் பகுதியில் உள்ள 4 கிணறுகளை 5 ஆயிரம் ரூபாய் செலவில் ஆழப்படுத்துவது, பேரூராட்சி பொது நிதியில் இருந்து புதியதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி முன்பாக 3 லட்சம் ரூபாய் செலவில் போர்டிகோ கட்டுவது, 12ம் வார்டில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க 1.2 லட்சம் ரூபாய் செலவு செய்து 11வது வார்டு, 9 வது வார்டுகளில் மினிகுடிநீர் தொட்டி அமைப்பது, மேலும் 2009-10ம் ஆண்டில் சொர்ண ஜெயந்தியோஜானா திட்டத்தின் கீழ் 1.44 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்வது உட்பட மொத்தம் 5.57 லட்சம் ரூபாய் செலவில் பல பணிகள் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாண்டுரங்கன்,ஏழுமலை,செல்வன் ஆறுமுகம், பாபு, இளங்கோவன், ரமேஷ் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் சண்முகம் நன்றி கூறினார்.