தினகரன் 01.12.2010
வளர்ச்சி பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு
மதுரை, டிச. 1: வளர்ச்சி பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களுக்கு நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மற்றும் தென் மாவட்டங்களிலுள்ள நகராட்சி ஆணையாளர்கள் கூட்டம் மதுரையில் நடந்தது. சாலை சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் ஆலோசனை நடத்தினார்.
அவர் கூறியதாவது: சாலைகளை சீரமைக்க அரசு சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளது. மழை காலம் முடிந்ததும் சாலை சீரமைப்பு பணிகளை சிறப்பாக விரைவாக முடிக்க வேண்டும். இதில் தீவிர கவனம் தேவை. வளர்ச்சி திட்ட பணிகளை 2011 மார்ச் இறுதிக்குள் முடித்து மக்கள் பயன்பெற செய்ய வேண்டும். இதில் எந்த காரணம் கொண்டும் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது. குடிநீர் விநியோகம், சுகாதார பணிகள் எந்த குறைபாடும் இல்லாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் நேரு நகர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நடைபெறும் குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம், பாதாள சாக்கடை பணி, மழை நீர் வடிகால் திட்டம், அவனியாபுரம், சக்கிமங்கலம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். திட்டங்களில் எந்த குறைபாடும் இருக்க கூடாது. மாநகராட்சி வரி நிர்ணயத்தில் சீரான முறையை கடைபிடித்து, வசூலிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், நகராட்சிகளின் மதுரை மண்டல அதிகாரி அசோகன் பங்கேற்றனர்.