தினமணி 07.10.2010
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ 3.35 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
ஒட்டன்சத்திரம்,அக். 6: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ 3.35 கோடி செலவிலான வளர்ச்சிப் பணிகளை, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் முதற்கட்டமாக 1 முதல் 9 வார்டுகளுக்கு தேவையான சிமெண்ட் சாலை, கலையரங்கம், சிறுபாலம், சாக்கடை, தெரு விளக்கு உள்பட பல பணிகளுக்கான பூமிபூஜை அந்தந்த வார்டு பகுதியில், புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எம்.பி. மூர்த்தி தலைமை வகித்தார்.
நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், நகராட்சி உறுப்பினர்கள் ராமராஜ், ஆனந்தன், ஜின்னா, சுப்பிரமணி, சின்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, வளர்ச்சிப் பணிகளை பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.
இதில், ஒட்டன்சத்திரம் ஒன்றிய தி.மு.க. செயலர் இரா. சோதிசுவரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, மோகன், முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.