தினகரன் 27.09.2010
குன்னூர் நகரில் ரூ34 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
குன்னூர், செப்.27: குன்னூர் நகர் பகுதியில் ரூ.34 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குன்னூர் நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
குன்னூர் நகராட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது:
குன்னூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்கள் இறக்கும் பட்சத்தில் ஈம சடங்கிற்காக நகராட்சி சார்பில் ரூ500 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது இத்தொகை ரூ2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம், சந்திரா காலனியில் ரேஷன் கடை, சத்திய மூர்த்தி நகரில் தடுப்பு சுவர், கன்னி மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய், மிஷின் ஹில் பகுதியில் நடைபாதை என ரூ19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சிக்கு உட்பட்ட மோர்ஸ் கார்டன் பகுதியில் பூங்கா பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ5
லட்சம் மதிப்பில் இப்பூங்காவை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பணிக்கான டெண்டரும் விரைவில் விடப்படும். நகராட்சிக்கு குடிநீர் நிதி திட்டத்தின் கீழ் பழைய ஜிம்கானா தடுப்பனையை அகற்றி புதிய தடுப்பனை கட்ட ரூ10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது.
நகர பகுதியில் வளர்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் வகையில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.