Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ஒசூர் நகராட்சியோடு 10 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க முடிவு!

Print PDF

தினமணி 14.09.2010

ஒசூர் நகராட்சியோடு 10 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க முடிவு!

ஒசூர், செப். 13: ஒசூர் நகராட்சியுடன் 10 உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்க்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து, ஒசூரை மாநகராட்சியாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளாட்சித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஒசூர் நகர்மன்றத்தின் அவரசக் கூட்டம், அதன் தலைவர் எஸ்..சத்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அவர்

பேசியது:

சூசூவாடி, மூக்கணடப்பள்ளி, சென்னத்தூர், ஆவளப்பள்ளி ஆகிய 4 ஊராட்சிகள் மற்றும் மத்திகிரி பேரூராட்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்க தீர்மானம் நிறைவேற்ற முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த 5 உள்ளாட்சி அமைப்புகளோடு, பேரண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி ஆகிய 5 ஊராட்சிகளையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் 10 உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சியோடு இணையும் என்றார்.

இதற்கு திமுக, காங்கிரஸ், பாமக, அதிமுக உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கரூர் நகராட்சியை மாநகராட்சியாக்க தீர்மானம்

Print PDF

தினமணி 14.09.2010

கரூர் நகராட்சியை மாநகராட்சியாக்க தீர்மானம்

கரூர், செப்.13: கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் பெ. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் ஆர். உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் நிலை உயர்த்துதல் தொடர்பாக கரூர் நகராட்சியை இனாம்கரூர், தாந்தோன்றிமலை நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றுவது தொடர்பாக ஊராட்சி துறையிடமிருந்து வரப்பட்ட ஆணை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவதற்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கரூர் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்து வதற்கு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தலைவர் கொண்டு வந்த தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் வை. நெடுஞ்செழியன், பி. முத்துசாமி,எஸ். கமலா, எஸ். வளர்மதி, பி. பரமசிவம் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தத் திட்டம் நிறைவேற சட்டப்பேரவையில் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி பலமுறை பேசியுள்ளார் என்றனர். இதற்கு திமுக உறுப்பினர்கள் இரா. பிரபு, என். மணிராஜ், ஆண்டாள்பாலகுரு, வே. கதிரவன் உள்ளிட்ட உறுப்பினர்கள், சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு என்றாவது செந்தில்பாலாஜி சென்றதுண்டா என்று கேள்வியெழுப்பினர்.

எந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை திமுகவினர நிரூபிக்கத் தயாரா என்று அதிமுகவினர் கேட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. அப்போது தலைவர், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதென்றால் வெளிநடப்பு செய்வதை விட்டுவிட்டு ஏன் கூச்சலில் ஈடுபட வேண்டும். கூட்டத்தில் பொதுமக்களின் பிரச்னை குறித்து மட்டுமே பேசவேண்டும். எனவே, உறுப்பினர்கள் அனைவரும் அவரவர்கள் இருக்கையில் அமரவேண்டும் என்றார்.

இருந்தும் கூச்சல் நிற்கவில்லை. அப்போது, உறுப்பினர் எஸ். கமலா தலைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சபை அமைதியானது. சபையின் முன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுகவினர் வலியுறுத்தினர். எங்களின் பிரச்னையைத்தான் தலைவரிடம் கூறினோம் என்றனர் அதிமுகவினர். இதைத் தொடர்ந்தும் அதிமுக-திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்க வேண்டும் என்றார் திமுக உறுப்பினர் என். மணிராஜ். அதற்கு ஆணையர் ஆர். உமாபதி, 25.10.2011-க்குப் பின்னரே மாநகராட்சியாகத் தரம் உயரும். அப்போது மேயராக வருபவர்தான் அந்தத் திட்டம் குறித்து முடிவு செய்வார். தரம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு நிதி அதிகளவில் கிடைக்கும். அப்போது, தரம் உயர்த்தப்படுவதால் கட்டண உயர்வு ஏற்பட்டால் அதிமுக போராடும் என்றார் அதிமுக உறுப்பினர் பி. முத்துசாமி.

 

ஓசூர் நகராட்சியுடன் 9 பஞ்., இணைப்பு : கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினமலர் 14.09.2010

ஓசூர் நகராட்சியுடன் 9 பஞ்., இணைப்பு : கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

ஓசூர்: ஓசூர் நகராட்சியுடன் ஒன்பது பஞ்சாயத்துகளை சேர்க்க கவுன்சில் கூட்டத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓசூர் நகராட்சியுடன் புற நகர் பஞ்சாயத்துகளை இணைக்கும் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொ) இளங்கோவன், துணை தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: நகராட்சி தலைவர் சத்யா (தி.மு..,): ஓசூர் நகரம் 1969ம் ஆண்டு நகர பஞ்சாயத்தாக உருவாக்கப்பட்டு, 1998ம் ஆண்டு நகராட்சியாக தரம்உயர்த்தப்பட்டது. தற்போது நகரம் தொழில் ரீதியாக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் நகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக புறநகர் பகுதியில் தொழிற்சாலைகள் நிறைந்த மூக்கொண்டப்பள்ளி, ஜுஜுவாடி, சென்னத்தூர், ஆவலப்பள்ளி, மத்திகிரி டவுன் ஆகிய பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

ஜெயபிரகாஷ் (பா...,): நகராட்சியுடன் பஞ்சாயத்துகளை இணைத்தால் சுற்று வட்டார கிராமங்கள் வளர்ச்சி பெறும். நகருக்கு கிடைக்க வேண்டிய மானிய உதவிகள், அரசு திட்டங்கள் உள்ளிட்டவை அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஸ்சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, குடிநீர் திட்டம் ஆகியவை உடனடியாக கிடைக்க வாய்ப்புள்ளது. இது நல்லதொரு நடவடிக்கை. பா..., சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். லோகநாதன் (.தி.மு..,): கடந்த 2001ம் ஆண்டு நகராட்சியுடன் பஞ்சாயத்துகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தவமணி (.தி.மு..,): பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைப்பது மூலம் பஞ்சாயத்து கிராமங்களில் வரிஎதுவும் உயர்த்தப்படுமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். கமிஷனர் இளங்கோவன்: எல்லையை விரிவுப்படுத்துவதால் பஞ்சாயத்துகளில் வரி உயர்த்தப்படாது. வரிசீராய்வு செய்வது கவுன்சிலர்கள் முடிவுதான். தற்போது நகராட்சியுடன் பஞ்சாயத்துகளை இணைத்தாலும், அடுத்த உள்ளாட்சி தேர்தல் வரை பஞ்சாயத்து நிர்வாகம் பஞ்சாயத்து தலைவர்கள் அதிகாரத்தின் கீழ் செயல்படும். துணை தலைவர் மாதேஸ்வரன் (தி.மு..,): தற்போது இணைக்கப்படும் பஞ்சாயத்துகளுடன் தொழிற்சாலைகள் நிறைந்த மேலும் சில பஞ்சாயத்துகளை சேர்க்க வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களும் நகருடன் சேர்ந்து வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

சத்யா: அதிக வருவாய் கிடைக்கும் ஒன்னல்வாடி, பேரண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, தொரப்பள்ளி ஆகிய பஞ்சாய்ததுகளையும் நகராட்சியுடன் இணைக்க தீர்மானத்தில் சேர்க்கப்படும்.

பிரகாஷ் (காங்.,): பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைப்பதால் ஏற்படும் வசதிகள், பயன் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கமிஷனர் இளங்கோவன்: பொதுவாக அனைத்து அரசு திட்டங்களும் 40 ஆண்டு மக்கள் தொகை, பரப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது பஞ்சாயத்துகளை இணைப்பதால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட நகருக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கூடுதலாக பெற்று தர முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது. கிராம பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைக்கப்படுவதன் மூலம் மாநகராட்சியாக மாற்றுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியிருப்பது மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

 


Page 50 of 160