Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கட்சி பாகுபாடின்றி வளர்ச்சிப்பணிகள்:மேயர் பதில்

Print PDF

தினமலர் 18.08.2010

கட்சி பாகுபாடின்றி வளர்ச்சிப்பணிகள்:மேயர் பதில்

மதுரை:மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல மக்கள் குறை தீர் கூட்டம், மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது. துணை மேயர் மன்னன், துணை கமிஷனர் தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தனர். பாதாள சாக்கடை, தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் மனு கொடுத்தனர். இவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

அப்போது மேயரிடம் 71வது வார்டு, .தி.மு.., உறுப்பினர் ராஜபாண்டி, ""எதிர்கட்சி வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடப்பதில்லை. வேண்டுமென்றே புறக்கணிக்கிறீர்கள்'" என்றார். இதற்கு பதில் அளித்த மேயர் மற்றும் துணை மேயர், "அனைத்து வார்டுகளையும் சமமாகத் தான் நடத்துகிறோம். வளர்ச்சி பணிகளில் கட்சி பாகுபாடு கிடையாது," என்றனர்.

இதில் சமாதானம் அடையாத ராஜபாண்டி, தொடர்ந்து புகார் கூறியபடி இருந்தார். முன்னதாக, பெத்தானியாபுரத்தில் சாக்கடை தேங்கிய இடங்கள், வைகை கரையோரம் கொட்டப்டும் குப்பை ஆகியவற்றை மேயர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூட்டத்தில், தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் ரவீந்திரன், மண்டல தலைவர் நாகராஜன், கவுன்சிலர் சிலுவை, நிர்வாக பொறியாளர் சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் வார்டு, மண்டலங்கள் அதிகரிக்கிறது வரும் தேர்தலில் பதவி ஒதுக்கீட்டிலும் மாறுதலாக வாய்ப்பு

Print PDF

தினகரன் 16.08.2010

மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் வார்டு, மண்டலங்கள் அதிகரிக்கிறது வரும் தேர்தலில் பதவி ஒதுக்கீட்டிலும் மாறுதலாக வாய்ப்பு

மதுரை, ஆக. 16: மதுரை மாநகராட்சி எல்கை விரிவாக்கத்தில் வார்டு, மண்டலங்கள் இரு மடங்காக அதிகரிக்கின்றன. வரும் தேர்தலில் பதவி ஒதுக்கீட்டு முறையிலும் மாறுதல் வரலாம்.

மதுரை மாநகராட்சி எல்லை தற்போதுள்ள 52 சதுர கி.மீ. பரப்பளவில் இருந்து 200 .கி.மீ. ஆக விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து இறுதி வடிவம் கொடுக்க சென்னையில் இன்று (ஆக.16ல்) உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்காக மதுரையில் இருந்து ஆணையர் செபாஸ்டின் தலைமையில் குழு சென்றுள்ளது.

விரிவாக்கத்தின் மூலம் மாநகராட்சியில் பெரிய மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. 1971ல் மதுரை மாநகராட்சியானபோது 22 .கி.மீ. பரப்பளவில் இருந்தது. 1974ல் 13 கிராமங்கள் சேர்க்கப்பட்டு 52 .கி.மீ. பரப்பாகி 72 வார்டுகளாக்கப்பட்டன. 4 மண்டலங்கள் உள்ளன.

36 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விரிவாக்கத்திற்கு அரசு அறிவிப்பு வெளியானதும் வார்டு, மண்டலங்கள் பிரிப்புக்கு தனியாக குழு அமைக்கப்படும் என தெரிகிறது. குழு அறிக்கையின்படி வார்டு மண்டலங்கள் எண்ணிக்கை இரு மடங்காக வாய்ப்புள்ளது.

தற்போதுள்ள 72 வார்டுகளில், ஒரு சில வார்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு அதிகமாகவும், ஒரு சில வார்டுகளில் 10 ஆயிரத்துக்கு குறைவாகவும் உள்ளன. இவை அனைத்தும் சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பிறகு மாதிரி ஒரே சீரான முறையில் வாக்காளர் எண்ணிக்கை அமையும் வகையில் வார்டுகள் பிரிக்கப்படும்.

புதிதாக சேர்க்கப்படும் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் ஒரே சீராக மாநகராட்சி வார்டுகள் உருவாக்கப்படும். தற்போது மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 4 மண்டல தலைவர் பதவிகளில் பெண் இல்லை. எனவே மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, 2011 அக்டோபரில் நடக்கும் மாநகராட்சி தேர்தலில் பதவிகளில் புதிய ஒதுக்கீட்டு முறை வரவும் வாய்ப்புள்ளது.

புதிய கிராமங்கள் மாநகராட்சி பகுதியில் இணைக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாநகராட்சி தரப்பில் கூறப்படுவதாவது:

பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை வசதி, சுகாதார வசதி, மின் விளக்கு, சாலை வசதி கூடுதலாக கிடைக்கும். நிலத்தின் மதிப்பு உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விரிவடைகிறது மதுரை மாநகராட்சி எல்லை

Print PDF

தினமணி 13.08.2010

விரிவடைகிறது மதுரை மாநகராட்சி எல்லை

மதுரை, ஆக.12: பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மதுரை மாநகராட்சியின் எல்லை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. எல்லை விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகரில் தற்போது உள்ள 4 மண்டலங்களை 20 மண்டலங்களாகப் பிரிக்க வாய்ப்புள்ளது.

நகராட்சியாக இருந்த மதுரை, 1971}ம் ஆண்டு மாநகராட்சியானது. அப்போது, மாடக்குளம், விராட்டிபத்து உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதன்படி மதுரை மாநகராட்சியின் எல்லை தற்போது 51.82 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில், 72 வார்டுகளும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது மாநகராட்சிப் பகுதி மக்கள்தொகை சுமார் 11 லட்சம்.

2000-ம் ஆண்டில் தீர்மானம்: இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தவேண்டும் என பல ஆண்டுகள் கோரிக்கையின் அடிப்படையில், கடந்த 2000-வது ஆண்டில் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், திருமங்கலம், திருப்பரங்குன்றம், நாமலைபுதுக்கோட்டை, உத்தங்குடி, கண்ணனேந்தல், திருப்பாலை, ஆனையூர், ஹார்விபட்டி, திருநகர், அவனியாபுரம், ஒத்தக்கடை, சமயநல்லூர், காதக்கிணறு, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற மாநகராட்சியின் எல்லை மதுரை மாநகராட்சியைவிட அதிகம் என்பதால், இதுபோன்ற விரிவாக்கம் மதுரைக்கும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் விரிவாக்கப் பகுதியில் உள்ள கிராமங்களை இணைப்பதன் மூலம் சுமார் 170 சதுர கிலோ மீட்டர் வரை மதுரை மாநகராட்சி எல்லை விரிவடையும் என நகரமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விரிவாக்கம் அவசியம்: தற்போது மக்கள்தொகைக்கு ஏற்ப எல்லையை விரிவுபடுத்தவும், வளர்ச்சித் திட்டங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதுபோன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால்தான் எதிர்காலத்தில் வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க முடியும்.

மேலும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் | 2,360 கோடி மதிப்பிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநகரத்தையொட்டியுள்ள நகர்களுக்கான ஒருங்கிணைந்த நகர் வளர்ச்சித் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படவுள்ளன. இதுபோன்ற பெரிய திட்டங்கள் மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ளன. மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் மூலம் இதுபோன்ற பகுதிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் வரும்போது மேம்பாட்டுத் திட்டங்களை அதிக நிதி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நகர்மயமாதல்: மேலும், மாநகராட்சியை ஒட்டி பல கிராமங்கள் உள்ளன. இதன் எல்லை விரிவடைந்தால் அந்த கிராமங்களுக்கும் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளது. கிராமங்களும் நகர்மயமாவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

எல்லை அதிகரிப்பு காரணமாக வளர்ச்சிப் பணிகளுக்காக மாநில, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, சுற்றுலாத் துறை சார்பில் அளிக்கப்படும் நிதியுதவி உள்ளிட்டவை

அதிகரிக்கும். சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மாநகராட்சிக்கும் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

100 வார்டுகள் கூடுதலாக வாய்ப்பு: மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 72 வார்டுகள் உள்ளன. எல்லை விரிவாக்கத்தால் கூடுதலாக 100 வார்டுகள் உதயமாக வாய்ப்புள்ளது. இதனால், மாநகராட்சியில் கூடுதல் பணியாளர்கள், அதிகாரிகளை நியமிக்க வேண்டிய சூழ்நிலையில் வேலைவாய்ப்பும் கிடைக்க வழியேற்படும்.

ஆலோசனைக் கூட்டம்: இந்நிலையில், சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர் அசோக் வரதன் செட்டி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதனால், எல்லை விரிவாக்கத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்ப்பதாக மாநதகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 59 of 160