தினகரன் 17.06.2010
மத்திய அமைச்சர் தகவல் நகர புனரமைப்பு திட்டம் 28 நகரங்களுக்கு விரிவாக்கம்
பெங்களூர், ஜூன் 17:ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேலும் 28 நகரங்களை இணைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று மத்திய நகர வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கர்நாடகாவில் ஹூப்ளி உள்பட 28 நகரங்களை ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி ஹூப்ளியில் 5 லட்சம் மக்கள் தொகை உள்ளது. தற்போது 65 நகரங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவருகிறது. நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை இந்தியாவில் 800 மில்லியனுக்கு மேல் செல்ல அடுத்த 25 ஆண்டுகளில் வாய்ப்புள்ளது.
தற்போது 300 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. பெங்களூர் ஐ.டி. துறையால் வளர்ச்சி பெற்றிருந்தாலும், இதே காரணத்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள், நவீன தொழில்நுட்பம்,கல்வி நிலையங்களில் இயற்கையான வளர்ச்சி ஏற்படும் போது போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பது சகஜம். எனவே பெங்களூர் போக்குவரத்து நெரிசலிலும் புகழ் பெற்றுவருகிறது. இதர நகரங்களை விட பெங்களூருக்கு மெட்ரோ போக்குவரத்து அவசரம். பெங்களூர் மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். இவ்வாறு மத்திய நகர வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறினார்.