தினமலர் 12.04.2010
திருப்புத்தூரில் ரூ.40 லட்சத்தில் நவீன பூங்கா பணி துவக்கம்
திருப்புத்தூர் : திருப்புத்தூரில் தூர்வாரப்பட்ட ஆலமரத்து ஊரணியில் நவீன பூங்கா வசதியுடன் கூடிய சிறுகுளம் கட்டும் பணி துவங்கியுள்ளது.இங்கு, நீண்ட காலமாக மக்களின் பொழுது போக்கிற்கென நவீன பூங்கா வசதி இல்லை என்ற குறை இருந்தது. பூங்கா அமைக்க போதிய இடம் இன்றி, இத்திட்டம் கிடப்பில் கிடந்தது. இதற்கிடையில், பல ஆண்டுகளாக நெருக்கடியான இடத்தில் இயங்கும் பஸ் ஸ்டாண்ட்டிற்கு புதிதாக, ஆலமரத்து ஊரணியில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் நோக்கில், 30லட்சம் ரூபாய் எம்.பி., நிதியில் ஊரணி தூர்வாரப்பட்டது. பேரூராட்சி பொறியாளர்கள் நடத்திய ஆய்வில், பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்ட மண் ஆதாரம் இல்லை எனக்கூறினர். இதனால், பஸ் ஸ்டாண்ட் திட்டம் முடங்கியது.
நவீன பூங்கா: ஆலமரத்து ஊரணியில், நவீன வசதி கொண்ட பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். இதற்காக, பின்தங்கிய பகுதி திட்டத்தில், 40 லட்சம் ரூபாயில் பூங்காவிற்கான அடிப்படை கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. நவீன பூங்காவில், நடைபாதை, பூச்செடிகள் வளர்த்தல், மரம் நடுதல், மக்கள் அமர நாற்காலி, சிறுவர்களுக்கான விளையாட்டு கருவி, ஊஞ்சல்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். பூங்கா பணி இரண்டு மாதத்திற்குள் நிறைவடையும் என பேரூராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.