தினமணி 19.02.2010
நாகை புதிய கடற்கரையை அழகுப்படுத்தும் பணி ஆய்வு
நாகப்பட்டினம், பிப். 18: நாகை புதிய கடற்கரையை பொலிவுப்படுத்தும் பணியை நாகை மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை புதிய கடற்கரையை சீரமைத்து, அழகுப்படுத்தும் திட்டம் ரூ. 2.43 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்துக்கு, தமிழக சுற்றுலாத் துறை மூலம் ரூ. 1.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நமக்குநாமே திட்டத்தின் கீழ், வங்கிகள், நகர வளர்ச்சி அறக்கட்டளை, வர்த்தக சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ. 40.5 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அரசு பங்களிப்பாக ரூ. 81 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துமிடம், நடைபாதைகள், சிறுவர் பூங்கா, புல்வெளிகள், இருக்கைகள், வளைவுப் பூங்கா மற்றும் பார்வையாளர்கள் அமருமிடம் ஆகியன அமைக்கும் பணிகள் ரூ.1.6 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பணிகள் தரமாகவும், துரிதமாகவும் நடைபெற வேண்டும் எனவும், தடுப்புச் சுவர்கள் தரமான செங்கல்களைக் கொண்டு கட்டப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது நாகை வருவாய்க் கோட்டாட்சியர் சி. ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் சிவக்குமார், வட்டாட்சியர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர் ஹிலால் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.