Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு அமைச்சர் நேரு உறுதி

Print PDF

தினகரன் 31.12.2009

வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு அமைச்சர் நேரு உறுதி

திருச்சி: கனரக வாகனங்களின் போக்குவரத்தால் சேதமடைந்த வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு போடப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி 35 மற்றும் 37வது வார்டு விமான நிலைய பகுதியில் இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று அன்னை ஆசிரம பள்ளி வளாகத்தில் நடைபெற் றது. கலெக்டர் சவுண் டையா தலைமை வகித்தார். கலர் டிவி வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் அறிவித்தது போலவே அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வரும் மார்ச்சுக்குள் 40 லட்சம் தொலைக் காட்சிப் பெட்டிகளை தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே இன்னும் இரு மாதத்தில் விடுபட்டுள்ள எல்லாருக்கும் டிவிக்கள் வழங்கப்படும்.

குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் 35 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் 3 தொட்டிகள் விமான நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது. எனவே இன்னும் 6 மாதத்தில் இப்பகுதியில் குடிநீர் பிரச்னை முற்றிலும் தீர்ந்துவிடும்.

விமான நிலையப் விரிவாக்கப் பணிகளுக்காக, ஏர்போர்ட் மேற்கு பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக கிழக்கே நத்தமாடிப்பட்டி பகுதியில் தரிசு நிலங்கள்தான் கையகப்படுத்தப்பட உள்ளது. அங்கே நிலம் எடுப்பதற்கு பதிலாக உரிமையாளர்களுக்கு தற்போதுள்ள நிலவரப்படி தொகை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடு இடிக்கப்படும் நிலை வந்தால், வீடு கட்ட தொகையும், இடத்திற்கு மாற்று இடமும் கொடுக்கின்றோம். எனவே யாரும் அது பற்றி கவலைப்பட தேவையில்லை. மேலும் ஜவர்ஹர்லால் நேரு ஊரகப் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள் தலா ரூ.3 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிட்டன. திருச்சியிலும் அத்திட்டத்தின் கீழ் நிதியை பெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு பெற்றுவிட்டால் மாநகராட்சியில் எல்லா அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.

வயர்லெஸ் ரோடு வழியாக வரும்போதுதான் அந்த ரோட்டின் நிலையை அறிந்தேன். போக்குவரத்து மாற்றப்பட்டு இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால்தான் ரோடு இவ்வாறு சேதமடைந்தது. ஏற்கனவே திமுக ஆட்சியில்தான் இந்த ரோடு போடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரோடு போடப்பட உள்ளது. இன்னும் 2 நாளில் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

35வது வார்டு பகுதியில் வசிக்கும் 1,950 குடும்பத்தினருக்கு இலவச வண்ண தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அதேபோல இதே பகுதியில் உள்ள 37 வார்டுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,305 குடும்பத்தினருக்கும் டிவிக்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கவுன்சிலர் காளீஸ்வரன் செய்திருந்தார். டிஆர்ஓ தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி மேயர் சுஜாதா, எம்எல்ஏக்கள் சேகரன், அன்பில் பெரியசாமி, துணை மேயர் அன்பழகன், கமிஷனர் பால்சாமி, கவுன்சிலர் ஆர்.சி.கணேசன், கிராப்பட்டி செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 31 December 2009 06:16
 

சென்னை வளர்கிறது

Print PDF

தினகரன் (தலையங்கம்) 31.12.2009

சென்னை வளர்கிறது

குடும்பமாக இருந்தாலும், குட்டி அலுவலகமாக இருந்தாலும் நிர்வாகம் செய்வதென்பது சிரமமான விஷயம். ஊரையே நிர்வகிப்பது எத்தனை சிக்கலானது என்பதை சொல்லத் தேவையில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் என்னதான் மெகா திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும் பிரச்னைகள் தீராது; புதிது புதிதாக முளைக்கும். இந்த பின்னணியில் பார்க்கும்போது, ‘சென்னை பெருநகர மாநகராட்சிஎன்ற அமைப்பை உருவாக்க அரசு எடுத்துள்ள முடிவு தவிர்க்க முடியாதது. 174 சதுர கிலோமீட்டர் பரந்திருக்கும் நகரின் தேவைகளை பூர்த்தி செய்யவே திணறும்போது நகரம் 426 சதுர கி.மீ. விரிந்தால் என்ன ஆகுமோ என்ற கவலை பலருக்கு. உலகெங்கும் மகாநகரங்கள் இப்படித்தான் ஒருங்கிணைத்து நிர்வகிக்கப்படுகின்றன. மொத்த மனிதர்களில் பாதி பேருக்கு மேல் மாநகரங்களில் வசிக்கிறார்கள். ஆனால், பூமியில் இவை ஆக்கிரமித்திருக்கும் நிலப்பரப்பு அரை சதவீதத்துக்கும் குறைவு.

போட்டி கடுமையாக இருந்தாலும் வாழ்வதற்கான வாய்ப்புகளை அள்ளித் தருவது மாநகரங்கள் என்பதால் மக்கள் அந்த திசையில் குடி பெயர்ந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் மாநகர நிர்வாகம் புதைமணலாக தோன்றுகிறது. முன்னேறிய நாடுகள் இதற்கான புதிய நுட்பங்களை கண்டறிந்து செயல்படுத்தும்போது, ஏனைய நாடுகளும் தமது சூழலுக்கேற்ப அவற்றை திருத்தி பயன்படுத்துகின்றன. உதாரணமாக மாநகர போக்குவரத்து தலையாய பிரச்னை. ஒவ்வொரு நாடும் வெவ்வேறு வழிகளில் இதற்கு தீர்வு கண்டுள்ளன. நமக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதை அடையாளம் கண்டு தத்தெடுப்பதுதான் சவால்.

பொதுவாகவே நமது நாட்டில் பொறுப்புகள் துல்லியமாக வரையறுக்கப்படுவது இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாக அமைப்புகள் இருந்துவிட்டால் பொறுப்புகளை தட்டிக் கழிப்பது இன்னமும் சுலபம். எனவே, வளரும் நகரத்துக்கு இணையாக நிர்வாக ஊழியர்களை அதிகரிப்பது பலனளிக்காது என்று பல நாடுகள் புரிந்து கொண்டன. பதிலாக மின்னணு நிர்வாகத்தை நாலாபக்கமும் விஸ்தரிக்கின்றன. 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மக்கள்தொகை அடிப்படையில் புதிய வார்டுகள் அமைக்க ஓராண்டுக்கு மேல் அவகாசம் இருக்கிறது. மிகச்சிறந்தவை என நிரூபணமான நிர்வாக வழிமுறைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த அதனை பயன்படுத்தலாம்.

Last Updated on Thursday, 31 December 2009 06:14
 

சென்னையுடன் 9 நகராட்சி இணைப்பு: தமிழக அரசு உத்தரவு

Print PDF

தினமணி 31.12.2009

சென்னையுடன் 9 நகராட்சி இணைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை, டிச. 29: சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட 9 நகராட்சிகளும், புழல், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளும், 25 ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி இப்போது 174 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தரமான சாலைகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியுள்ளன.

போதுமானதாக இல்லை... சென்னை பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வரும் சேவைகளின் நிலை பெருமளவில் வேறுபடுவதோடு அவை போதுமானதாக இல்லை. இந்த நிலையில், சென்னை மாநகருக்கு அருகே மற்றும் தொடர்ச்சியாக அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து இப்போதைய சென்னை மாநகராட்சிப் பகுதியை விரிவாக்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சில நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.

இணைக்கப்படும் நகராட்சிகள்: கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம் (அனைத்தும் திருவள்ளூர் மாவட்டம்), ஆலந்தூர், உள்ளகரம்} புழுதிவாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்).

பேரூராட்சிகள்: சின்ன சேக்காடு, புழல், போரூர் (திருவள்ளூர் மாவட்டம்), நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம்).

ஊராட்சிகள்: இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடப்பெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம் (அனைத்தும் திருவள்ளூர் மாவட்டம்), முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம்- துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி (அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்டம்).

பாதிக்காத வகையில்... தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2011}ல் முடிவடைந்தவுடன் புதிய மாநகராட்சி அமைக்கப்படலாம்.

உத்தேசிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் புதிய வார்டுகள் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்படலாம். சென்னை மாநகராட்சியின் இப்போதைய வார்டுகளும் மக்கள் தொகையின் மக்கள் தொகையின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படலாம்.

ஆணையருக்கு புதிய பணி... தமிழகத்தில் புதிதாக மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறை, சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கும் பின்பற்றப்படும்.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கான வார்டு எல்லைகளை நிர்ணயித்தல், மண்டலங்கள் அமைத்தல், இப்போதைய வார்டுகளை மாற்றியமைத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து பணிகளையும் சென்னை மாநகராட்சி ஆணையர் மேற்கொள்வார்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கென தேவையெனில் சிறப்பு அதிகாரியை பணியமர்த்திக் கொள்ள ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

சிறப்பு அதிகாரி தனது அறிக்கையை ஆறு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் நிரஞ்சன் மார்டி தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 30 December 2009 10:35
 


Page 130 of 160