தினமணி 22.12.2009
உலக தமிழ் மாநாட்டையொட்டி கோவையில் 35 புதிய பூங்காக்கள்
கோவை, டிச.21: உலக தமிழ் மாநாட்டையொட்டி கோவையில் 35 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. 52-வது வார்டில் முதல் பூங்காவுக்கு
திங்கள்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. மாநகராட்சியில் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட 52-வது வார்டு ஏ.கே.எஸ்.நகரில் இப் பூங்கா அமைக்கப்படுகிறது. சிறுவர் விளையாட்டு சாதனங்கள், முதியோர் இளைப்பாறும் வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வசதி உள்ளிட்டவை இப் பூங்காவில் அமைக்கப்படவுள்ளன.
பூமி பூஜை நிகழ்ச்சியை மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைத்தார். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தலைமை வகித்தார். 52-வது வார்டு கவுன்சிலர் எம்.நடராஜ் முன்னிலை வகித்தார்.
மேயர் வெங்கடாசலம், ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: மாநாட்டையொட்டி கோவையை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் ரூ.8 கோடியில் 35 பூங்காக்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்குள் இப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுவிடும். இதுதவிர, நகரில் முக்கிய சாலைகள் சீரமைக்கப்படும். சாலையில் நடுவில் இருக்கும் இரும்பு தடுப்புகள், தெருவிளக்கு வசதிகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இருக்கும் பூங்காக்களில் புதிய வண்ணங்கள் பூசப்படவுள்ளன என்றனர்.