தினமணி 23.11.2009
புதை சாக்கடை இணைப்புப் பணிகளை துரிதப்படுத்த புதிய நடைமுறை
தஞ்சாவூர், நவ. 22: தஞ்சாவூர் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், இப்பணிகளை துரிதப்படுத்த புதிய நடைமுறைகளை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவர நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நகராட்சிகளில் புதை சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், தஞ்சாவூர் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்திற்கு பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிப்பதிலும், இணைப்புகள் வழங்குவதிலும் பணிகள் மிகவும் மந்தமாக இருப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநரால் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் நகராட்சியில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் புதை சாக்கடை இணைப்பு தொடர்பான பணிகளை 100 சதம் நிறைவேற்ற காலக் கெடு நிர்ணயித்துள்ளனர். மேலும், டிசம்பர் 30-ம் தேதிக்குள் 30,000 புதை சாக்கடை இணைப்புகளுக்கு வைப்புத் தொகை மற்றும் இணைப்பு கட்டணம் வசூல் செய்து அத்தொகையிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நகராட்சி பங்கு தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புதை சாக்கடைத் திட்டத்தில் அதிகளவில் பங்கு பெறும் வகையில் தற்போதுள்ள இணைப்புக் கட்டணத்தை ரூ. 500-லிருந்து ரூ. 100-ஆக நகர்மன்ற ஒப்புதலுடன் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் அந்தந்த நகர்மன்ற உறுப்பினர் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வுப் பேரணி நடத்தி, அனைத்து குடியிருப்புகளுக்கும் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு நிர்வாக இயக்குநர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
டிசம்பர் மாதத்திற்குள் 100 சத இலக்கை அடைய நகராட்சியில் பணிபுரியும் அனைத்து வெளிப்புற அலுவலர்கள், பணியாளர்களையும் இப்பணிகளில் முழுமையாக ஈடுபடுத்ததவும் நிர்வாக இயக்குநர் அனுமதித்துள்ளார்.
இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து, புதை சாக்கடை இணைப்புகள் பெற பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளம்பரங்கள் மேற்கொள்ளவும் ரூ. 50,000 நிதி ஒதுக்க நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், புதை சாக்கடை இணைப்புக் கட்டணததை நவம்பர் முதல் ரூ. 100 ஆக குறைக்கவும் நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. செவ்வாய்க்கிழமை (நவ. 24) நடைபெறும் நகர்மன்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவது குறித்து தெரியவரும்.
தஞ்சாவூர் நகரில் பல இடங்களில் இணைப்பு பெற்ற புதை சாக்கடைகள் முறையாக செயல்படாமல் இருப்பதும், இணைப்புக்கு கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பான புகார்களும் எழுந்துவந்த நிலையில், புதை சாக்கடை இணைப்புப் பணிகள் மந்தமாக இருப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் தஞ்சாவூர் நகராட்சியை குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பான தீர்மானங்கள் நகராட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.