தினமணி 14.11.2009
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
கரூர், நவ.13: உப்பிடமங்கலம் பேரூராட்சியில் ரூ.54 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொ) சின்னத்துரை அண்மையில் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் மாட்டுச் சந்தை மாநில அளவில் புகழ்பெற்றது. இப்பகுதி சந்தையை மேம்படுத்துவது உள்ளிட்ட 10 வளர்ச்சித் திட்டப் பணிகள் ரூ.54 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. பணிகளை ஆய்வு செய்த உதவி இயக்குநர் சின்னத்துரை கூறுகையில், பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், லட்சுமணம்பட்டியில் ரூ. 1.94 லட்சம், சின்னாகவுண்டனூரில் ரூ. 1.92 லட்சம், புகையிலைகுறிச்சியானூரில் ரூ. 2.76 லட்சம்,
லிங்கத்தூரில் ரூ. 2.34 லட்சம், புதுகஞ்சமனூரில் ரூ. 2.10 லட்சம் மதிப்பீடுகளில் சிமென்ட், கான்கிரீட்சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதவிர உப்பிடமங்கலத்தில் ரூ. 13 லட்சத்தில் சமுதாயக்கூடம், ரூ. 10 லட்சத்தில் வணிக வளாகம், ரூ. 5 லட்சத்தில் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 5 லட்சத்தில் மயான மேம்பாட்டு பணிகளும், லட்சுமணம்பட்டியில் ரூ. 10 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார் அவர்.