தினமணி 29.09.2009
மதுரையில் வளர்ச்சிப் பணிகள்: மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு
மதுரை, செப். 28: மதுரையில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திங்கள்கிழமை திடீர் ஆய்வுசெய்தார்.
மதுரை பெரியார் பேருந்துநிலையப் பகுதியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுவரும் நவீன கழிப்பறைக்கான கட்டுமானப் பணியை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து நேதாஜி சாலைக்கு சென்று அங்கிருந்த போக்குவரத்துக் காவலரை அழைத்து, தீபாவளி நெரிசலைக் கருத்தில்கொண்டு இப்பகுதியில் போக்குவரத்தை சீராக வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
பின்னர், தெற்குமாசி வழியாக விளக்குத்தூண் வந்து அப்பகுதியில் போக்குவரத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, வெங்கலக்கடைத் தெரு வந்து நகைக்கடை பஜார் வழியாக மாநகரக் காவல்துறை ஆணையர் அலுலகத்துக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையைப் பார்வையிட்டார்.
அப்போது அங்குள்ள காவல்துறை அதிகாரிகளை அழைத்து இப்பாதை வாகனங்கள் செல்வதற்கு வசதியாக உள்ளதா என்று கேட்டறிந்தார்.
மேலும்,புதுமண்டபம் சென்று அங்குள்ள குன்னத்தூர் சத்திரத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள வணிக வளாகம் குறித்து பொறியாளர் அரசிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து சென்ட்ரல் மார்க்கெட் பகுதிக்கு வந்து அங்கு கட்டப்படவுள்ள நவீன வாகன நிறுத்துமிடத்தை ஆய்வுசெய்தார்.
கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்தை ஆய்வுசெய்த பின்னர், மாட்டுத்தாவணி அருகே புதிய சென்ட்ரல் மார்க்கெட் கட்டப்படும் பணியை பார்வையிட்டார்.
அப்போது அங்குள்ள பொறியாளரிடம் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.