Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

புதிய நகர்ப்புற அபிவிருத்தித் திட்டம் 3 மாதங்களில் தயாராகும்

Print PDF
தினமணி                   28.02.2013

புதிய நகர்ப்புற அபிவிருத்தித் திட்டம் 3 மாதங்களில் தயாராகும்


நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்தைத் திருத்தி புதிய திட்டத்தை 3 மாதங்களில் தயாரிக்க கோவை மாநகராட்சியில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சியில் புதன்கிழமை நடந்தது. இதுகுறித்து மேயர் செ.ம. வேலுசாமி கூறியது:

பிற மாநிலங்கள், சர்வதேச அளவிலான பிற நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளக் கூடிய இந்தச் சூழ்நிலையில், கோவை தொழிற்சாலைகளைக் காப்பாற்றுவதற்கான உத்திகளைப் பயன்படுத்தி மாநகராட்சியின் பொருளாதாரத்தைப் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

கல்விச் சாலைகள், மருத்துவமனைகள் கோவையில் அதிகமாக உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து இங்கு அதிகமானோர் வருகின்றனர். இதற்குத் தேவையான கட்டுமானங்கள், போக்குவரத்து வசதி, குடிநீர், தெருவிளக்கு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

இவற்றை மேம்படுத்தும் வகையில் நகர அபிவிருத்தித் திட்டத்தை வடிவமைக்க வேண்டும். நீர்நிலைகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார் மேயர் செ.ம.வேலுசாமி.

ஆணையாளர் (பொறுப்பு) சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி, தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகி பாஸ்கரன், பணிகள் குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், நிதிக்குழுத் தலைவர் பிரபாகரன், கணக்குகள் குழுத் தலைவர் கணேசன், மாநகரப் பொறியாளர் கருணாகரன், கண்காணிப்புப் பொறியாளர் கணேஷ்வரன், தனியார் ஆலோசகர்கள் பி.ஜே.நாயுடு, மீனாட்சி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
Last Updated on Friday, 01 March 2013 08:51
 

போடியில் நவீன எரிவாயு தகன மேடை பழுது

Print PDF
தின மணி           27.02.2013

போடியில் நவீன எரிவாயு தகன மேடை பழுது


போடி நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்துள்ளதால், சடலத்தை எரியூட்ட முடியாத நிலை ஏற்பட்டு, பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

போடி நகராட்சிக்குச் சொந்தமான சாந்திவனம் சுடுகாடு, போடி கொட்டகுடி ஆற்றங்கரையில் உள்ளது. இங்கு, சில மாதங்களுக்கு முன் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. இதில், கருவேலங் கட்டைகளை கொண்டு எரிவாயுவை உருவாக்கி, அதன்மூலம் சடலம் எரிக்கப்படுகிறது.

இந்த மையம் செயல்படுவதற்கு, திண்டுக்கல் சுற்றுச்சூழல் துறை மூலம் அனுமதி பெறப்பட்டது.

40 நாள்களுக்கு முன் தான் இந்த எரிவாயு தகன மையம் செயல்படத் தொடங்கியது. இந்த மையத்தை, பெரியார் சேவை மையம் மூலம் நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆனால், பெரியார் சேவை மையத்தினரால் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, போதிய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் போடி மேலத் தெருவில் இறந்த நாகம்மாள் (68) என்பவரின் சடலம், இந்த எரிவாயு மையத்தில் எரியூட்டுவதற்கு கொண்டுவரப்பட்டது. அதனைப் பெற்று, எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர், நாகம்மாளின் 3 மகன்கள் இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு, அவரது அஸ்தியை சிறிது நேரம் கழித்து வந்து பெற்றுச் செல்வதாகக் கூறிவிட்டு, உறவினர்களுடன் வீடு திரும்பிவிட்டனர்.

பின்னர், அஸ்தியை வாங்க உறவினர்கள் சிலர் மாலையில் மீண்டும் சுடுகாட்டுக்குச் சென்றனர். ஆனால், அங்கு சடலம் எரியூட்டப்படாமல் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், உறவினர்கள் சுடுகாட்டில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, பெரியார் சேவை மைய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பழைய முறையில் விறகுகளை அடுக்கி சடலத்தை எரியூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இத்தனை பிரச்னைகள் ஏற்பட்டும், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வராததால், இறந்தவரின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர்.

இது குறித்து, பெரியார் சேவை மைய நிர்வாகி சுருளிராஜ் கூறுகையில், நவீன எரிவாயு தகன மேடையில் கருவேலங்கட்டைகளை வைத்து எரிவாயு உருவாக்கும் முறையில் சிக்கல் உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் எரியூட்டும் முறை மற்றும் மின்சாரம் மூலம் எரியூட்டும் முறையை கொண்டு வரவேண்டும் என்றார்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:30
 

ரூ.2.50 கோடியில் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை

Print PDF
தின மலர்                27.02.2013

ரூ.2.50 கோடியில் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை

திருச்செங்கோடு: நகராட்சிக்கு புதிய நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜையை, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு, புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட, 2.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9,000 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள கட்டிடத்துக்கான கட்டுமான பணிகளை, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நகராட்சி சேர்மன் சரஸ்வதி, கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன், நகரமைப்பு அலுவலர் ரவீந்தரன், துணைத் தலைவர் சித்ரா, நகர அ.தி.மு.க., செயலாளர் மனோகரன், லாரிஉரிமையாளர் சங்கத் தலைவர் வேலு, நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோதி முத்துசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய கட்டிடத்தின் முதல் தளத்தில், நகராட்சி சேர்மன் அறை, கமிஷனர் அறை, கவுன்சில் அரங்கு, நகராட்சி பொதுப்பிரிவு ஆகியவையும், இரண்டாம் தளத்தில், டவுன் பிளானிங் செக்ஷன், வருவாய் பிரிவு, பொது சுகாதாரத் துறை பிரிவு ஆகியவை செயல்படும்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:15
 


Page 23 of 160