Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ரூ.4.85 கோடியில் புதுப்பொலிவு பெறும் மெரினா! கடலில் குளிக்க நிரந்தரத் தடை விதிக்கத் திட்டம்

Print PDF

தினமணி                               26.07.2012

ரூ.4.85 கோடியில் புதுப்பொலிவு பெறும் மெரினா! கடலில் குளிக்க நிரந்தரத் தடை விதிக்கத் திட்டம்


 சென்னை, ஜூலை 25: உலகிலேயே 2-வது நீண்ட, பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை ரூ.4.85 கோடி செலவில் அழகுபடுத்தப்பட உள்ளது. மேலும், அங்கு கடலில் பொதுமக்கள் குளிப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

 சென்னை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

 இதில், சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையை அண்ணா நினைவிடம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் சுமார் 13 கி.மீ. தூரத்துக்கு அழகுபடுத்துதல் மற்றும் ஆங்காங்கே உள்ள சிறு கடைகளை முறைப்படுத்தும் பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.4.85 கோடிக்கு மன்றத்தின் அனுமதி அளிக்கப்பட்டது.

 இதுவரையில் பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வந்த மெரினா கடற்கரை 24.10.2011 முதல் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 கடற்கரையின் மணல் பரப்பை மாநகராட்சி பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்காக நில அளவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இப்போது அங்குள்ள தாற்காலிக கடைகளை கணக்கெடுக்கும் பணி காவல் துறை மற்றும் சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்த கணக்கெடுப்புப் பணி முடிவடைந்த பின்பு மணல் பகுதியில் 3 இடங்களில் மட்டும் காவல்துறை ஒத்துழைப்புடன் வரிசையாக கடைகள் அமைக்கவும், இதர மணல் பகுதியை தூய்மைப் பகுதியாகவும், கடைகளை வைக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரை பகுதி சுத்தமாகவும், பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இப்போது கடைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதை அறிந்து கொண்டு புதிதாக புற்றீசல்கள் போல முளைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்த அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.4.13 கோடி செலவில் மின் இணைப்புடன் கூடிய இழுவிசைக் கூரை கொண்ட கடைகள் அமைக்கப்படும். கண்ணகி சிலை பின்புறமும், நீச்சல் குளம் பின்புறமும் சுமார் ரூ.60 லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படும். காமராஜர் சாலையிலிருந்து மெரினா அணுகு சாலை சந்திப்பில் ரூ.2.24 லட்சம் செலவில் தடுப்புக் கதவு அமைக்கப்படும்.

 மேலும், படகு வைக்கப்படும் இடத்தை அழகுபடுத்தும் வகையில் ரூ.7 லட்சம் செலவில் மூங்கில் தடுப்பு அமைத்தல் மற்றும் ரூ.3 லட்சம் செலவில் காவல்துறை கண்காணிப்பு உயர்கோபுரம் அமைத்தல் பணி மேற்கொள்ளப்படும் என மாமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 இந்த தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்களில் சிலர், மெரினா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 இங்கு கடலின் ஆழம் மற்றும் அலைகளின் வேகத்தைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை உள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகள் குளிப்பது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்து மேயர் பேசும்போது, மெரினா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதைத் தடுக்க எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை வைக்கவும், அங்கு பொதுமக்கள் குளிப்பதை நிரந்தரமாகத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.24 கோடி

Print PDF
தினமணி        30.11.2011

மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.24 கோடி


கோவை, நவ. 28: கோவை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக தமிழக அரசு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

÷மேலும் வடவள்ளி, குறிச்சி ஆகிய இடங்களில் தலா ரூ.2.5 கோடியில் பஸ் டெர்மினல் அமைக்கப்படுகிறது. வீரகேரளம், குறிச்சி பகுதிகளில் மின்மயானம் கட்டப்படுகிறது.

÷72 வார்டுகளாக இருந்த கோவை மாநகராட்சி தற்போது 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம், குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய 3-ம் நிலை நகராட்சிகள், துடியலூர், வெள்ளக்கிணறு, காளப்பட்டி, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சிகள், விளாங்குறிச்சி ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகள் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

÷பழைய மாநகராட்சிப் பகுதிக்கும், இணைக்கப்பட்ட பகுதிக்கும் அடிப்படை வசதிகளில் ஏராளமான ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. இணைக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலை, மழைநீர் வடிகால், கழிவுநீர்க் கால்வாய் வசதிகள் கிடையாது. அண்மையில் பெய்த கனமழையில், இணைக்கப்பட்ட மாநகராட்சிப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

 இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி வழங்கக் கோரி கோவை மாநகராட்சி சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சாலை, கழிவுநீர்க் கால்வாய், தெருவிளக்கு, மழைநீர் வடிகால் ஆகிய வசதிகளுக்கு முதல் கட்டமாக ரூ.24 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

 மேலும் வடவள்ளி, குறிச்சியில் பஸ் டெர்மினல் அமைக்க தலா ரூ.2.5 கோடியும், வீரகேரளம் மற்றும் குறிச்சியில் தலா ரூ.1.5 கோடியில் மின்மயானம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

÷இணைக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன், மாநகராட்சி ஆணையர் தி.க.பொன்னுசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அனைத்து உதவி ஆணையர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 இணைக்கப்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக சாலை அமைப்பதற்கான, மதிப்பீடுகளைத் தயார் செய்து உடனடியாக அனுப்புமாறு அவர் அறிவுறுத்தினார்.

 "புதிதாக இணைக்கப்பட்ட மாநகராட்சிப் பகுதிகள் அடிப்படை வசதிகளில், மிகவும் பின்தங்கியிருக்கிறது. இப் பகுதிகளுக்கு முதல்கட்டமாக அளிக்கப்பட்ட தொகையே மிகவும் குறைவாக இருக்கிறது'என்று பொறியியல் பிரிவு அலுவலர்கள் கூறுகின்றனர்.

 தார்ச்சாலை அமைக்க ஒரு கிமீ-க்கு ரூ.30 லட்சம் செலவாகிறது. புதிதாக ஒரு தெருவிளக்கு அமைக்க வேண்டும் எனில் ரூ.22 ஆயிரம் ஆகும்.

இதனால் முதல்கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதியில் எந்தப் பணிகளை எடுப்பது என பொறியியல் பிரிவினர் தீவிர ஆய்வில் இருக்கின்றனர்.
 

சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் கட்டமைப்புப் பணிகள் தீவிரம்

Print PDF

 தினமணி        30.11.2011

சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் கட்டமைப்புப் பணிகள் தீவிரம்


சென்னை, நவ. 29: சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 இது குறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அதிகாரிகள் கூறியது:

 சென்னை நகருடன் புதிய பகுதிகள் இணைக்கப்படுவதற்கு முன்பு உள்ள மக்கள் தொகை சுமார் 55 லட்சம் ஆகும். புதிய பகுதிகளைச் சேர்க்காமல் கழிவு நீர் கால்வாயின் மொத்த நீளம் 2677 கி.மீ. ஆகும். 196 கழிவு நீரேற்று நிலையங்கள் உள்ளன.

 கோயம்பேடு,கொடுங்கையூர், நெசப்பாக்கம் உள்பட 9 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்ய வசதியாக 30 மீட்டருக்கு ஒரு ஆள் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

 மொத்தம் 79 ஆயிரம் ஆள் நுழைவு வாயில்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 46 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. 2 ஆயிரத்து 228 பணியாளர்கள் உள்ளனர். கழிவு நீர் குழாயில் தூர்வார 70 தூர்வாரும் இயந்திரங்களும், 83 அடைப்பை நீக்கும் விசை இயந்திரங்களும் உள்ளன. வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர், நீரேற்று நிலையத்துக்கு குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்டபின் சென்னையில் ஓடும் ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது.

 மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழை நீர் கழிவு நீர் குழாயில் திருப்பி விடப்படுவதால் கழிவுநீர் குழாயில் நீர் அளவுக்கு அதிகமாக செல்வதால் அழுத்தம் அதிகரித்து குழாய்கள் உடைந்து விடுகின்றன. சென்னை நகரில் மழை நீர் வடிகால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்படாததால் மழைக் காலத்தில் அந்தக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்லாமல் கழிவு நீர் குழாயில் விடப்படுகிறது.

 இது குறித்து சென்னை மாநகராட்சியிடம் பல முறை தெரிவித்துள்ளோம். மழை நீரை சேமிப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

 புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள்: சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகளுக்கு தனியாக 3 மேற்பார்வை பொறியாளர்கள், 7 பகுதி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள் அந்தப் பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள், குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றுவது ஆகியவற்றுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகள், தேவையான அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்வது ஆகியவை தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதற்கு முன் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய பணியாளர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க குடிநீர் வாரியத்தில் பணிபுரியலாம்.

 மேலும் தேவையான பணியாளர்களை பணி அமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் முழுவதுமாக ஓராண்டுக்குள் முடியும் என்று எதிபார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
 


Page 30 of 160