Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கோவைக்கு ரூ.543 கோடியில் புதிய திட்டங்கள் : வீடியோ கான்பரன்சில் முதல்வர் துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்பு

Print PDF

தினகரன்                 13.12.2010

கோவைக்கு ரூ.543 கோடியில் புதிய திட்டங்கள் : வீடியோ கான்பரன்சில் முதல்வர் துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்பு

கோவை, டிச. 13: கோவையில் புதிய மேம்பாலம், செம்மொழி பூங்கா, தேசிய ஆடை வடிவமைப்பு சிறப்பு மையம் உள்ளிட்ட ரூ.543 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் முன்னிலையில் முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று துவக்கி வைத்தார்.

கோவையில் காந்திபுரம் மேம்பாலம், செம்மொழி பூங்கா, அண்ணா பல்கலைக்கழக புதிய கட்டிடம், காண்டூர் கால்வாய் புனரமைப்பு, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பில் ரூ.21 கோடி செலவில் தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி சிறப்பு மையம், சர்தார் வல்ல பாய் பட்டேல் சர்வ தேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தில் ரூ.20 கோடியில் புதிய கட்டி டம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா கோவை வஉசி மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்பதாக இருந்தது. திடீர் உடல் நலக்குறைவால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டு சென்னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முறையில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். தமிழக ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் வரவேற்றார்.

அடிக்கல் நாட்டி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

கோவையில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதாக இருந்தேன். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காததால் வர முடியாததற்கு வருந்துகிறேன். எனது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்களிடம் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கோருகிறேன். .

இன்று கோவைக்கு ரூ.543 கோடி மதிப்பில் பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கிட நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் மற்றும் திறப்பு விழாவில் பங்கு பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கோவை சிங்காநல்லூரில் தங்கி வாழ்ந்த காலம் தொட்டு என் சிந்தையில் என்றும் நிறைந்திருக்கும் இந்த கோவை மாநகர வளர்ச்சியில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.

கோவை மாநகர வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் கடந்த காலங்களில் வேளாண்மை பல்கலைக்கழகம், சிறுவாணி குடிநீர், கோவையில் மூன்றடுக்கு மேம்பாலம், கோவை கிராஸ்கட் ரோட்டில் மேம்பாலம், கோவை சத்தியமங்கலம் சாலையில் பாலம், கோவை சிறுவாணி சாலையில் பாலம், கோவை&திண்டுக்கல் சாலையில் பாலம், நொய்யல் ஆற்றில் பாலம், ஆத்துப்பாலம், புறவழிச்சாலை, அண்ணா பல்கலைக்கழகம், 29 ஏக்கரில் ரூ.250 கோடி செலவில் தகவல் தொழில் நுட்ப பூங்கா, ரூ.1659 கோடியில் கோவை மாநகரை மேம்படுத்த ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பட்டு புனரமைப்பு திட்டம், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களை ஈர்த்து எழுச்சியோடு கடந்த ஜூன் மாதம் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இதையொட்டி மாநகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அவற்றுடன் மேலும் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட இந்த விழாவில் அடிக்கல் நாட்டப்படுகிறது.

செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று தான் காந்திபுரம் மேம்பாலம். காந்திபுரம் பகுதியில் பேருந்து நிலையங்களும், பல்வேறு வணிக நிறுவனங்களும் அருகருகே அமைந்துள்ளன. கோவையில் போக்குவரத்து நெரிசலும், வணிக நிறுவனங்களும் அதிகமாக உள்ள காந்திபுரத்தில் நெரிசலை தவிர்க்க ரூ.148 கோடி மதிப்பில் ஒரு கிமீ தூரம் கொண்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. நஞ்சப்பா ரோட்டில் தொடங்கி சத்தியமங்கலம் ரோடு வரை இந்த பாலம் அமைக்கப்படும்.

மாநாட்டில் அறிவிக்கப்பட்ட மற்றொன்று, தற்போது மத்திய சிறைச்சசாலை அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்படவுள்ள செம்மொழி பூங்கா. 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படவுள்ளது. அதற்காக கோவை சிறைச்சாலை வெள்ளலூரில் 75 ஏக்கரில் மாநகராட்சி இடத்துக்கு மாற்றப்படும். அதற்கு முன்பாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.25 கோடி செலவில் பூங்காவின் கட்டடங்கள் இல்லாத முதல் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

பரம்பிகுளத்தில் இருந்து திருமுர்த்தி அணைக்கு செல்லும் காண்டூர் கால்வாய் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அது தற்போது சிதிலமடைந்துள்ளது. இதனால் முழு கொள்ளளவு தண்ணீரையும் கொண்டு செல்ல முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது.

அதை சீரமைக்கவேண்டும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை சீரமைக்க ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நூற்றாண்டு விழாவையொட்டி செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக 50 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆயிரம் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் மேலும் ஆயிரம் படுக்கை வசதியும், 250 மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைக்கப்படும்.

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 181 கல்லூரிகளை இணைப்பாக கொண்ட கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சோமையம்பாளையத்தில் 121 ஏக்கர் பரப்பளவில் ரூ.67 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் லாபம் ஈட்டும் சிறந்த நிறுவனமாக விளங்கும் கோவை ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் திறன் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளவில் இருந்து 5 லட்சம் என உயர்த்திடும் நோக்கில் ஏறத்தாழ ரூ.28 கோடி மதிப்பில் கோவை ஆவின் நிறுவனம் நவீனமயமாக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் குறுகிய கால ஆடை வடிவமைப்பு தொழில் சார்ந்த பயிற்சிகள், பட்டமேற்படிப்பு, பட்டய கல்வி, ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி தொழில் தொடர்பான படிப்புகள் போன்றவை வழங்கிடும் நோக்கத்தில் மத்திய ஜவுளித்துறை மூலம் 6.5 ஏக்கர் பரப்பில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ரூ.25 கோடி செலவில் தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இன்றைய விழாவில் மட்டும் 7 புதிய கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

அதேபோல் சர்தார் வல்லபாய் படேல் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சார்பில் ரூ.21 கோடி செலவில் புதிய கட்டிடங்களும் திறக்கப்பட்டுள்ளன. இப்படி கோவை மாவட்டத்துக்கு செயல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டமைப்புகள் அனைத்தும் குறித்த நேரத்திற்குள் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாற்றவேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

முதல்வர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய பின்னர், கோவை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சாமிநாதன், மதிவாணன் ஆகியோர் பேசினர்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை காந்திபுரம் மேம்பாலம், காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டிடம், செம்மொழிப் பூங்கா, அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகம், கோவை ஆவின் நவீனமயமாக்கல் மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்திற்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி புதிய கட்டிடங்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். உடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கணேசன்.

 

"வேளச்சேரி ஏரியில் 7 கோடியில் படகு குழாம்'

Print PDF

தினமணி          10.12.2010

"வேளச்சேரி ஏரியில் 7 கோடியில் படகு குழாம்'

வேளச்சேரி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னை, டிச.9: வேளச்சேரி ஏரியில் 7 கோடியில் சுற்றுலா பயணிகளுக்கான படகு குழாம் அமைக்கப்பட உள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரி ஏரியை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

வேளச்சேரி ஏரியை அழகுபடுத்துவதற்காக ஆலோசகர் நியமிக்கப்பட்டு வரைவுகள் பெறப்பட்டன. மொத்தம் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 49 ஏக்கர் பரப்பை அழகுபடுத்தி, தூய்மைப்படுத்தி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக படகு குழாம் அமைக்கப்பட உள்ளது. ஆலோசகர் வழங்கியுள்ள வரைவுகளின்படி, திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றார்.

 

வேளச்சேரி ஏரியில் அமைகிறது ரூ.7 கோடியில் படகு குழாம்: மேயர் தகவல்

Print PDF

தினமலர்              10.12.2010

வேளச்சேரி ஏரியில் அமைகிறது ரூ.7 கோடியில் படகு குழாம்: மேயர் தகவல்

வேளச்சேரி : வேளச்சேரி ஏரியை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்து, படகு குழாம் அமைப்பது குறித்த ஆய்வுகளை மேயர் சுப்ரமணியன் நேற்று மேற்கொண்டார்.

சென்னை வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, அழகு படுத்தி சீரமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்து வந்தது. சர்வே எண் 123/1 ல் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவு 265.48 ஏக்கர். சென்னை புறநகரில் உள்ள மவுன்ட், ஆதம்பாக்கம், கிண்டி, மடுவாங்கரை, ராஜ்பவன், .டி.வளாகம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும், மழைநீர், இந்த ஏரியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக, வேளச்சேரி ஏரியின் கரைகளை உடைத்து ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வசமாக்கி வருகின்றனர். தற்போது, வேளச்சேரி ஏரி, மூன்றில் ஒரு பங்காக சுருங்கி 55 ஏக்கர் பரப்பளவு மட்டுமே காணப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் ஏரி தூர்ந்துவிட்டது. இது குறித்து "தினமலர்' நாளிதழ் அவ்வப்போது படத்துடன் கூடிய செய்திகளை வெளியிட்டு வந்ததுஇந்நிலையில், ஏரியை சீரமைத்து அதில் படகு குழாம் அமைப்பது குறித்து, மேயர் சுப்பிரமணியம் தலைமையில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளுடன் வேளச்சேரி ஏரியில் ஆய்வுகளை மேற்கொண்ட சுப்ரமணியன் கூறியதாவது:

மொத்தம் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட, இந்த ஏரியில் ஆறு ஏக்கர் பரப்பளவில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. மீதமுள்ள 49 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியினை சீரமைத்து அதில் படகு குழாம் அமைக்க, ரூ.7 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் ஐந்து கோடியும், மெட்ரோ வாட்டர் சார்பில், இரணடு கோடியும் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அழகிய வண்ண விளக்குகள், நாற்காலிகள், வாக்கிங் செல்பவர்களுக்கான நடை பாதை போன்ற பல்வேறு வசதிகளுடன் படகு குழாம் அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி, கூவம் நதி ஏரியில் கலக்காமல் இருக்கவும், அருகில் உள்ள ராம் நகர் மற்றும் அரசு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியினை வந்து சேராமல் இருக்கவும், மாற்று வழிகள் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுகள் முடிந்த பின்னர் சீரமைப்பு பணிக்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.

இந்த முறையாவது ஏரிக்கு விடிவுகாலம் கிடைக்குமா? : ஒவ்வொரு ஆண்டும் வேளச்சேரி ஏரியினை பார்வையிடும், அதிகாரிகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஏரியினை சீரமைத்து தருவதாக கூறி வந்தனர். கடந்த ஆண்டில் கூட சுற்றுலாத் துறை சார்பில், ஏரியில் படகு குழாம் அமைப்பதாகக் கூறிச்சென்றனர். ஆனால், ஏதும் நடக்கவில்லை. இந்த முறையாவது அரசு சீரமைப்பு பணிகளை கிடப்பில் போடாமல் செயல்படுத்தினால் சென்னையின் மிகப் பெரிய ஏரியான வேளச்சேரி ஏரி காப்பாற்றப்படும்.

 


Page 32 of 160