தினமணி 14.05.2010
நிலுவைகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை
கரூர், மே 13: கரூர் நகராட்சியில் ரூ. 12 கோடி வரி பாக்கியுள்ளதாகவும், வரி நிலுவைகளை வசூலிக்க நகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நகராட்சி ஆணையர் கோ. உமாபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கரூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க அனைத்து உதவிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் நகராட்சி மேற்கொள்ளும்.
நகராட்சியின் வருமானத்தை பெருக்கும் வகையிலும், நிலுவையிலுள்ள வரிகளை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரூர் நகாட்சியில் சுமார் 78 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது 6 நாள்களுக்கு ஒருமுறை சுமார் 80 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நகராட்சி மூலமாக தனியார் வீடுகள், குடியிருப்பு வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் சாலைகளுக்கு 11,440 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானோர் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை முறையாகச் செலுத்தவில்லை.
எனவே, குடிநீர் வரி மட்டும் ரூ. 2.75 கோடி பாக்கி உள்ளது. இதை வசூலிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக ரூ. 10 ஆயிரத்திற்கு மேல் வரி பாக்கியுள்ளவர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து, ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் பாக்கியுள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். பொதுமக்கள் தங்கள் குடிநீர் வரி பாக்கியை தவணை முறையிலும் செலுத்தலாம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
இதேபோல, சொத்து வரி ரூ. 5.49 கோடியும், தொழில் வரி ரூ. 1.20 கோடியும், மற்ற வரி இனங்களில் ரூ. 2.10 கோடியும், மற்ற இனங்களில் ரூ. 1 கோடியும் பாக்கி உள்ளது.
இந்த அனைத்து வரி இனங்களின் பாக்கிகளையும் வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. வரிகள் முழுமையாக வசூலாகும் போது, கரூர் நகராட்சிக்குத் தேவையான கூடுதல் குடிநீர்த் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும் என்றார் உமாபதி.