தினமலர் 21.06.2010
வரிச் செலுத்தாதவர்களுக்கு 30க்குள் நோட்டீஸ் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு மாநில அதிகாரி கெடு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வரி முழுமையாக வசூல் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள் மூலம் சுமார் 4 கோடி ரூபாயிற்கு மேல் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரியினை விரைவாக செலுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் வலியுறுத்தி வருகிறார். வரியினை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சென்னை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலக கூடுதல் இயக்கநர் சந்திரசேகரன் தூத்துக்குடிக்கு வந்தார். பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணிகள் நடப்பதையும் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார். பின்னர் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். அதிகமான வரிப்பாக்கி இருக்கிறது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் உள்ள வரிப் பாக்கிக்கு வரும் 30ம் தேதிக்குள் டிமாண்ட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.செப்டம்பர் 30ம் தேதிக்குள் முழுமையாக வரி வசூல் செய்து, எந்த ஒரு பாக்கியும் இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். இல்லை என்றால் இது சம்பந்தமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு சந்திரசேகரன் எச்சரிக்கை விடுத்ததாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.