தினமணி 21.07.2010
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற வரிகளை செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்:மேயர்
மதுரை, ஜூலை 20: மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற சொத்து வரி, பொட்டல் வரி மற்றும் பாதாளச் சாக்கடை வரிகளை செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என மேயர் கோ.தேன்மொழி கேட்டுக்கொண்டார்.
மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 22 முதல் 30 வார்டுகள் வரையிலும், 66 முதல் 72 வார்டுகளிலும் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் கோ.தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம்.மன்னன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல், பாதாளச் சாக்கடை அமைத்தல், சாலைகளை சீரமைத்தல் ஆகிய கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.
பின்னர் மேயர் பேசுகையில், அனைத்து வார்டுகளிலும் பாதாளச் சாக்கடைப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. வைகை 2-வது கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளதால் வீடு மற்றும் உரிமையாளர்கள் மாநகராட்சியை அணுகி பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம்.
பொட்டல் வரி, வீட்டு வரி, குழாய் வரி மற்றும் பாதாளச் சாக்கடை வரிகளை பொதுமக்கள் செலுத்தி மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் மண்டலத் தலைவர் கே.நாகராஜன், கவுன்சிலர்கள் தம்பிதுரை, ராஜபாண்டி, கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.விஜயகுமார், முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன், முதன்மை நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர்கள் ரவீந்திரன், ஆசைதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.