தினமலர் 10.08.2010
குடிநீர் கட்டணம், டிபாஸிட் தொகை... உயர்வு!
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில், புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்த குடிநீர் வரி, டிபாஸிட் தொகை கடுமையாக உயர்த்தியுள்ளதை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.ஆத்தூர் நகராட்சி கவுன்சில் அவசர கூட்டம் நகராட்சி சேர்மன் பூங்கொடி தலைமையில் நேற்று நடந்தது.
அதில், மேட்டூர்- ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வரை 295.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் வரும் 20ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதியால் சேலத்தில் துவக்கி வைக்கப்பட உள்ளது. அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, குடிநீர் வரி மாதந்தோறும் வீட்டு உபயோகத்துக்கு (அடைப்புக்குறிக்குள் பழைய வரி) 150 ரூபாய்(75), டிபாஸிட் 6,000 ரூபாய்(3,000), வணிக உபயோகத்துக்கு 400 ரூபாய்(200), டிபாஸிட் 15,000 ரூபாய்(7,500), சிறிய தொழிற்சாலைக்கு 500 ரூபாய்(300) , டிபாஸிட் தொகை 25 ஆயிரம்ரூபாய்(10 ஆயிரம்) உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், பெரிய தொழிற்சாலைகள், திருமண மண்டபங்களுக்கு 500 ரூபாய்(300), டிபாஸிட் 30 ஆயிரம் ரூபாய் (10 ஆயிரம்) என உயர்த்த மன்றத்தின் அனுமதி கோரப்படுகிறது என தீர்மானம் வைக்கப்பட்டது. அதற்கு காங்கிரஸ்,- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்., நகர்மன்ற குழு தலைவர் திருஞானம் பேசுகையில், ""ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது தவறான தகவல். குடிநீர் முறையாக வழங்காத நிலையில், குடிநீர் வரி, டிபாஸிட் தொகை உயர்த்தியது மக்களை வேதனையடைய செய்துள்ளது. அத்தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் மணிகண்டன், ""மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்க முடியாததால், புதிய குடிநீர் திட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. 295 கோடி ரூபாய் திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி, சேலத்தில் துவக்கி வைக்கிறார். அதற்கான தீர்மானமும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார். நகராட்சி கவுன்சிலர் ராஜா (அ.தி.மு.க.,), ""குடிநீர் வரி, டிபாஸிட் தொகை உயர்த்துவது குறித்து ஏற்கனவே நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க., அரசு, அதிகளவில் குடிநீர் வரி, டிபாஸிட் செலுத்தும்படி அறிவித்துள்ளது கொடுமை,'' என்றார்.நகராட்சி சேர்மன் பூங்கொடி (தி.மு.க.,), ""2009ல் நடந்த கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய குடிநீர் திட்டம் அமல்படுத்தும்போது தான் குடிநீர் வரி, டிபாஸிட் தொகை உயர்த்தப்படும்,'' என்றார்.அவரது பதிலில் திருப்தி அடையாத அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உமாராணி, சாந்தி, ராஜா, ஜெய்சங்கர், இளையராஜா, குணசேகரன் ஆகியோர் எழுந்து சேர்மன் பூங்கொடி இருக்கை முன், குடிநீர் வரி உயர்த்தும் தீர்மானத்தை நிறுத்தும்படி மனு அளித்து, வாக்குவாதம் செய்தனர். பின், ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆப்சென்ட்: நேற்று ஆத்தூர் நகராட்சி கவுன்சில் அவசர கூட்டத்தில் அ.தி.மு.க., நகர்மன்ற குழு தலைவர் மோகன், தி.மு.க., குழு தலைவர் ஸ்டாலின், பா.ம.க., குழு தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.