தினமணி 13.08.2010
பொதுமக்கள் கேபிள் கட்டணம் செலுத்த வேண்டாம்
காரைக்கால், ஆக. 12 : காரைக்கால் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியை செலுத்தாததால், வாடிக்கையாளர்கள் கேபிள் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று காரைக்கால் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரைக்கால் நகர்மன்றக் கூட்டத்தின் 28வது கூட்டம் தலைவர் ஆர். பிரபாவதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த பல கூட்டங்கள் சுமூகமாக நடக்காததால், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளதாகவும், உறுப்பினர்கள் சுமூகமாக பேசி கூட்டத்தை நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாத விவரம்:
செய்யது அகமது, கார்த்திகேசன், வி.ஏ. அம்புரோஸ்: காரைக்காலில் கே.எல். டிவி என்ற தனியார் கேபிள் ஆபரேட்டர் நிறுவனம், நகராட்சிக்கு | 88 லட்சம் கேளிக்கை வரி பாக்கி செலுத்தாமல் இருந்த நிலையில், அந்த நிறுவனத்தை டைமண்ட் டி.வி. என்று பெயர் மாற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வாறு அனுமதி அளித்தது.
தற்போது அந்த கேபிள் நிறுவனம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வரி பாக்கி செலுத்தாமல் இருப்பதால், அதுகுறித்து நகராட்சியின் நடவடிக்கை என்ன? என்றனர்.
இதையடுத்து, கேளிக்கை வரி செலுத்தாததால், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் செலுத்தும் கேபிள் கட்டணத்தை செலுத்த வேண்டாம் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஆணையர் முறையான அறிவிப்பு வெளியிட உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
காரைக்காலில் மதகடி, காதல்சுல்தான், பி.கே.சாலை வார்டு குப்பை அகற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரைக்காலில் வாரச் சந்தையை மன்றத்தின் ஒப்புதலின்றி இடம் மாற்றியதாகவும், தாற்காலிக மார்க்கெட் வளாகம் உரிய வசதிகளின்றி அமைக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
காரைக்கால் நகரப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி தர மன்றம் ஒப்புதல் அளித்தது. ஆடு அறுக்கும் கட்டணத்தை உயர்த்தியும், நகரில் முறையான குடிநீர் விநியோகம், மின்விளக்குகள் சீரமைப்பது, விளம்பரத்துடன் கூடிய நிழற்குடை அமைக்க அனுமதி என 34 பணிகளுக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகர்மன்ற துணைத் தலைவர் இ. தங்கவடிவேல், ஆணையர் ஜோஸ்பேட்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உறுப்பினர்களுடன் அமர்ந்த துணைத் தலைவர்: கூட்டத்தில் வழக்கமாக, தலைவர், துணைத் தலைவர், ஆணையர் ஆகியோர் மன்றத்தின் மையப் பகுதி இருக்கையில் அமர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.
திமுகவை சேர்ந்த தலைவர் பிரபாவதிக்கும், காங்கிரûஸ சேர்ந்த துணைத் தலைவர் தங்கவடிவேலுக்கும் அண்மை காலமாக இணக்கமான உறவு இல்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து துணைத் தலைவர் அமர்ந்து, கேள்விகள் எழுப்பினார்.