தினமணி 17.08.2010
குடிநீர் இணைப்புக்கு கூடுதல் டெபாசிட் தொகை
சிதம்பரம், ஆக.16: சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு கூடுதல் டெபாசிட் தொகை பெறுவது குறித்து தீர்மானத்தை கண்டித்து அதிமுக, மதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் ஜி.மணிவேல் பேசுகையில் வீட்டு உபயோகத்துக்கான குடிநீர் இணைப்பு டெபாசிட் உயர்த்துவதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்தார்.
அதன் பின்னர் அதிமுக மற்றும் மதிமுகவைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பேசிய விபரம் வருமாறு:
அ.ரமேஷ் (பாமக)- குடிநீர் சரியாக கொடுக்க முடியாத நிலையில் இணைப்புக்கான டெபாசிட் தொகையை உயர்த்துவது சாத்தியமாகாது. திருமண மண்டபம், தங்கும் விடுதிகளுக்கு கூடுதல் டெபாசிட் தொகை பெறலாம்.
வீட்டு உபோயகத்துக்கான குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகையை உயர்த்துவதை கைவிட வேண்டும்.
த.ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக)- வீட்டு உயோக குடிநீர் இணைப்புகள் 5381 உள்ளன என தவறான புள்ளிவிவரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இணைப்பு பெற்றவர்களிடம் டெபாசிட் தொகையை உயர்த்தி வாங்கக் கூடாது. இனிவரும் காலங்களில் புதிதாக இணைப்பு கோருபவர்களிடம் கூடுதல் டெபாசிட் தொகையை வசூலிக்கலாம்.
அப்புசந்திரசேகர் (திமுக)- | 7.50 கோடி செலவிலான புதிய குடிநீர் திட்டத்துக்கு பொதுமக்களை பாதிக்காத வகையில் நிறைவேற்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பை அளிப்போம்.
வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக)- நகரின் அனைத்து கழிவுநீரும் எனது வார்டு வழியாக பஸ்நிலையம் அருகில் உள்ள ஆற்றில் கலக்கிறது. மழைகாலம் வருவதால் எனது வார்டில் உள்ள வடிகால்களை தூர்வார வேண்டும்.
மேம்பாலம் அருகே உள்ள இலவச பொது கழிப்பறையில் தனியார் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதால் அந்த கழிப்பறையை தாற்காலிகமாக மூட வேண்டும்.
ஏ.ஆர்.சி.மணி (திமுக)- தெற்குரத வீதியில் பாரத ஸ்டேட் வங்கி அருகே தனியார் வணிக நிறுவனங்களால் குப்பைகள் கொட்டப்பட்டு பகல் 11 மணிக்கு அள்ளப்படுகிறது.
பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இது குறித்து தினமணியில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சிதம்பரம் நகரில் 4 வீதிகள், பஸ் நிலையம், எஸ்.பி.கோயில் தெரு, வேணுகோபால்பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் இருவேளையும் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க அப்பணியை தற்போது தாற்காலிகமாக நியமிக்கபபட்டுள்ள 30 துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.