தினமலர் 15.09.2010
வார்டு அலுவலகங்களிலும் சொத்துவரி வசூலிப்பு மையங்கள்
சென்னை : சென்னை மாநகராட்சியில் 155 வார்டு அலுவலகங்களிலும் சொத்து வரி வசூலிப்பதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் சொத்து வரி வசூலிப்பது தான்.கடந்த 2009-2010ம் ஆண்டு 362 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநாராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்திலும், 10 மண்டல அலுவலகங்களிலும் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.மேலும், சொத்துவரி வசூலிப்பவர்கள் கையடக்க கருவிகள் மூலம் வீடு வீடாக சென்று சொத்துவரி வசூலிக்கின்றனர்.இந்நிலையில் சொத்து வரி வசூலிப்பை மேலும் எளிமைப்படுத்த சென்னை மாநகராட்சி அனைத்து வார்டு அலுவலகங்களிலும் சொத்து வரி வசூலிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேயர் சுப்ரமணியன் நேற்று தி.நகர் 126 வார்டு அலுவலகத்தில் தொடங்கி வைத்து கூறியதாவது:மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பை மேலும் எளிமைப்படுத்த 155 வார்டு அலுவலகங்களிலும் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.அந்தந்த வார்டுகளில் உள்ள பொதுமக்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள சிறப்பு கவுன்டரில் சொத்துவரி செலுத்தலாம். சொத்து வரி செலுத்த பொதுமக்கள் இனி மண்டல அலுவலகங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.வார்டு அலுவலகங்களில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்டர்கள் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்.காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வார்டு அலுவலக சிறப்பு கவுன்டரில் சொத்துவரி செலுத்தலாம்.வாரம்தோறும் திங்கட்கிழமை சிறப்பு கவுன்டருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிப்பதால் சொத்து வரி வசூலிப்பு தொகை மேலும் கூடுதலாக வாய்ப்புள்ளது.இவ்வாறு மேயர் கூறினார்.