Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அரையாண்டு வரியினம் செலுத்த கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 20.09.2010

மாநகராட்சி அரையாண்டு வரியினம் செலுத்த கமிஷனர் அறிவிப்பு

திருச்சி: "திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு, வணிக உபயோகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு சொத்துவரி விதிக்கப்பட்டு 1994ம் ஆண்டின் திருச்சி மாநகராட்சி சட்டம் 2வது அட்டவணையில் பகுதி 4ன் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு அரையாண்டு துவங்கிய 15 நாட்களுக்குள், சொத்துவரி, குடிநீர் கட்டணம், புதைவடிகால் சேவைக் கட்டணம் ஆகிய இனங்களுக்கான கேட்புத் தொகையை செலுத்த வேண்டும்.

அதன்படி, 2010 - 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி துவக்கமான முதல் அரையாண்டுக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது. அரையாண்டு முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையிலும், இதுவரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் அதிக நிலுவையில் உள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் வரி வசூல் மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக நடப்பாண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான கேட்பு எழுப்பப்பட்டுள்ளது. வரிவிதிப்பாளர் இரண்டு அரையாண்டுக்கும் சேர்த்து வரியினங்களை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, குடியிருப்பு, வணிக உபயோகம், மற்றும் தொழிற்சாலை கட்டட உரிமையாளர் தாங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்ற வரியினங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.